சூலூர் அருகே சோளத்தட்டு ஏற்றிச்சென்ற லாரி மின்கம்பியில் உரசியதில் ஏற்பட்ட தீவிபத்தில் லாரியின் பின்பக்கம் முழுவதும் தீக்கிரையான நிலையில் தீயணைப்பு துறையினர் ஜேசிபி உதவியுடன் சோளத்தட்டுகளை கீழே தள்ளி தீயை அணைத்தனர்.
கோவை: கோவை மாவட்டம் சூலூர் அருகே சோளத்தட்டு ஏற்றிச் சென்ற லாரி மின்கம்பியில் உரசியதில் ஏற்பட்ட விபத்தில், ஒரு லட்சம் மதிப்பிலான சோளத்தட்டுகள் தீக்கிரையாகின.
சூலூர் அடுத்த கண்ணம்பாளையம் பகுதியில் முருகசாமிக்கு சொந்தமான தோட்டத்திலிருந்து பாலமுருகேசன் என்பவர் சோளத்தட்டுகளை லாரியில் ஏற்றிக் கொண்டு திருப்பூரை நோக்கி சென்று கொண்டிருந்துள்ளார்.
அப்போது தோட்டக் கலைத்துறை அலுவலகம் முன்பாக வந்த போது அங்கிருந்த தாழ்வான மின்கம்பியில் சோளத்தட்டுகள் உரசியதில், சோளத்தட்டுகளில் தீப்பற்றியது.
லாரியின் பின் பகுதியில் தீ மளமளவென பரவிய நிலையில், இதனை கண்டு அதிர்ச்சியடைந்த லாரியை ஒட்டி வந்த பாலமுருகேசன் உடனடியாக லாரியை நிறுத்தியுள்ளார். இதனையடுத்து லாரியில் இருந்து கீழே இறங்கிவிட்டு, சூலூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் லாரியில் இருந்த சோளத்தட்டுகளை ஜேசிபி மூலம் கீழே தள்ளி பின்னர் தண்ணீரை பீச்சியடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த தீ விபத்தில் லாரி பின்பக்கம் முழுவதும் தீக்கிரையான நிலையில், ஒரு லட்சம் மதிப்பிலான சோள தட்டுகள் எரிந்து சாம்பலாகின. இச்சம்பவம் தொடர்பாக சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.