கோவை வால்பாறையில் தேயிலைத் தோட்டத்திற்கு பதுங்கியிருந்த கரடி திடீரென தாக்கியதில் தேயிலை தோட்ட மேற்பார்வையாளர் புஷ்பராஜன் படுகாயம். வால்பாறை நகர்மன்றதலைவர் அழகு சுந்தரவல்லி செல்வம் நேரில் நலம் விசாரித்து நிதியுதவி.
கோவை: கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்துள்ளது பன்னி மேடு தேயிலை தோட்டம். இங்குள்ள இரண்டாவது டிவிஷனில் தேயிலை தோட்ட மேற்பார்வையாளராக பணி புரிபவர் புஷ்பராஜன் (வயது 53). நேற்று வழக்கம்போல் அவர் தேயிலை தோட்டத்தில் பணியில் இருந்தபோது தேயிலைச் செடிகளுக்கு இடையே நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, தேயிலை செடிகளுக்கு நடுவே மறைந்திருந்த கரடி ஒன்று திடீரென அவரது காலை கடித்தது. கரடியை பார்த்தவுடன் புஷ்பராஜன் பயங்கரமாக சத்தம் போட்டார். இதையடுத்து, அருகில் இருந்தவர்களும் சத்தமிட்டபடியே ஓடி வந்ததால், அச்சமடைந்த கரடி அவரை விட்டுவிட்டு தப்பி ஓடியது.
கரடி தாக்கியதில் படுகாயம் அடைந்த புஷ்பராஜனை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு உருளிகல் எஸ்டேட்டில் உள்ள மத்திய மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவல் அறிந்த வால்பாறை நகர மன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி செல்வம் மருத்துவமனைக்கு சென்று, படுகாயமடைந்த புஷ்பராஜனை சந்தித்து ஆறுதல் தெரிவித்து, நிதி உதவியும் வழங்கினார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேயிலைத் தோட்டத்திற்குள் பதுங்கியிருந்து தாக்கிய கரடியால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.