கோவை மாநகராட்சி பகுதிகளில் சீரான குடிநீர் வழங்குவதற்கு ஏதுவாக சிறுவாணி அணையின் தற்பொழுதுள்ள நீர்வரத்து குறித்து மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் தெரிவிக்கையில், "கோவை மாநகராட்சியிலுள்ள ஐந்து மண்டலங்களான 100 வார்டு பகுதிகளிலும் சிறுவாணி பில்லூர் மற்றும் இதர நீர் ஆதாரங்களைக் கொண்டு சமமாக 12 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
மாநகராட்சிப் பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு கூடுதலாக டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. குடிசைப் பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை பொருத்தி லாரி மூலம் குடிநீர் விநியோகிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக கோவை மாநகராட்சியில் சிறுவாணி குடிநீரை சார்ந்துள்ள பகுதியான மேற்கு மண்டலம் வடவள்ளி பகுதிகளான வார்டு எண் 15, 18, 19, 20 மற்றும் 21 ஆகிய 5 வார்டுகளுக்கும், ஒரு வார்டுக்கு இரண்டு குடிநீர் லாரிகள் என ஐந்து வார்டுகளுக்கும் தினந்தோறும் 10 குடிநீர் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
மேலும், நடப்பாண்டில் தென் மேற்கு மற்றும் வட கிழக்கு பருவ மழை பொழியாத காரணத்தினால் சிறுவாணி அணையின் நீர் மட்டம் வெகுவாக குறைந்து, குறைந்த பட்ச நீர் இருப்பின் கீழ் சென்றுவிட்டதனால் 7.01.2017 முதல் தண்ணீர் வரத்து நின்று போனது.
இதனால் கோவை மாநகராட்சி மற்றும் வழியோர கிராமங்களுக்கு குடிநீர் விநியோகத்தில் பாதிப்பு இருந்து வந்தது. எனவே இரு மாநிலங்களுக்கிடையே நடந்த பேச்சுவார்த்தையின் மூலம் பம்பிங் செய்ய ஒப்புதல் பெறப்பட்டு 6.02.2017 முதல் சிறுவாணி அணையிலிருந்து நாளொன்றுக்கு சுமார் 20 மில்லியன் லிட்டர் வீதம் பம்பிங் செய்து கோவை மாநகராட்சி, வழியோர கிராமங்கள், பேரூராட்சி பகுதிகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், சிறுவாணி அணையில் பம்பிங் செய்யும் பணிகள் நடைபெற்று வருவதை ஆய்வு மேற்கொண்டது. தற்பொழுது சிறுவாணி அணையில் 5 மில்லியன் மீட்டர் கியூப் நீர் கொள்ளளவு உள்ளது. இதன் மூலம் ஜூன் மாதம் வரை பயன்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
அதாவது அடுத்த பருவ மழை தொடங்கும் வரை வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநகராட்சி மற்றும் வழியோர கிராமங்களின் குடிநீர் பற்றாக்குறை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆகவே, பொது மக்கள் குடிநீரை வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்." இவ்வாறு மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமைப் பொறியாளர் முருகேசன், ஆலோசகர் சம்பத்குமார், நிர்வாக பொறியாளர் டி.சுகுமார், மாநகராட்சி செயற்பொறியாளர் ஞானவேல், உதவி செயற்பொறியாளர் கருப்புசாமி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.