நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே கஸ்தூரிபாய் காலணியில் உள்ள குடியிருப்புகளை காலி செய்ய உத்தரவிட்டுள்ள நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து மத்திய பேருந்து நிலையம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரி: உதகை அருகே காந்தள் பகுதியில் உள்ள கஸ்தூரிபாய் காலணியில் சுமார் 100 குடும்பங்கள் வசித்துவருகின்றன. மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள இந்த மக்கள், ஆங்கிலேயர் காலத்திலிருந்தே இங்கு வசித்து வருகின்றனர். இந்த நிலையில் உதகை நகராட்சி நிர்வாகம், அப்பகுதியில் உள்ள மக்கள் குடியிருப்புகளை அகற்றிவிட்டு, விலங்குகள் மருத்துவ மையம் அமைக்க முடிவு செய்து குடியிருப்புகளை காலி செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் மத்திய பேருந்து நிலையம் முன் இன்று சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த உதகை நகர போலீசார், மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு வந்த உதகை வட்டாச்சியர் குடியிருப்புகள் காலி செய்யப்பட வேண்டியதில்லை எனக் கூறி சமாதானம் செய்தார். இதனை தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தைக் கைவிட்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.