அதிமுக ஓ.பி.எஸ் ஆதரவாளர் பெங்களூர் புகழேந்தி இறந்துவிட்டதாக சமூகவலைதளங்களில் பரப்பிய ஈபிஎஸ் தரப்பினர் மீது நடவடிக்கை எடுக்ககோரி கோவையின் முக்கிய இடங்களில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளன.
கோவை: கோவை பொய் தகவலை பரப்பிய எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களை கண்டித்து கோவை முழுவதும் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் ஒட்டிய போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோஷ்டி மோதல் காரணமாக அதிமுக கட்சி தலைவர்கள் சிதறி பயணித்து வருகின்றனர். எடப்பாடி பழனிச்சாமி ஒருபுறம், ஒ பன்னீர் செல்வம் மறுபுறம் அதிமுகவின் தலைமையின் நாற்காலிக்கு சண்டையிட்டுக் கொண்டிருக்கும் நிலையில், சசிகலாவும் தன் பங்குக்கு விட்டு வைப்பதாக தெரியவில்லை.
இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கும், எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கும் இடையில் அவ்வப்போது ஏற்படும் கருத்து மோதல்கள் சமூக வலைதளங்களில் பல்வேறு விவாதங்களுக்கு வழிவகுக்கின்றன.
அதன் ஒரு பகுதியாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பு ஆதரவாளர் ஒருவர், ஓ.பன்னீர்செல்வம் தரப்பு ஆதரவாளரான பெங்களூர் புகழேந்தி மறைந்து விட்டதாக தெரிவித்து கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒன்றை சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருக்கின்றார்.
இதனை கண்டித்து ஓ.பி.எஸ் தரப்பினர், பொய் தகவலை பரப்பிய எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசில் புகார் அளித்துள்ளனர்.
இதனிடையே கோவையில் ஓபிஎஸ் ஆதரவாளர் ஜாகிர் உசேன் என்பவர் புகழேந்தி இறந்து விட்டதாக கண்ணீர் அஞ்சலி போஸ்டரை வலைதளத்தில் பகிர்ந்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்ககோரி கோவையின் முக்கிய இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
நீதிமன்ற வளாகம், அரசாங்கக் கலைக் கல்லூரி, ஆட்சியர் அலுவலகம், குனியமுத்தூர், பீளமேடு என பல இடங்களிலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்களால் பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.