திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சி குப்பை கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், மொய்யணம்படுகை, குப்பிச்சிபாளையம், சீராம்பாளையம், வீராட்சி மங்கலம், துளசி மேட்டுகளம், சுங்கம், உள்ளிட்ட பகுதிகளில் வசித்து வரும் 2000 குடும்பங்கள் மூச்சுத் திணறலால் அவதிக்குள்ளாகினர்.
திருப்பூர்: திருப்பூர் தாராபுரம் 10 ஏக்கர் பரப்பில் உள்ள நகராட்சி குப்பை கிடங்கில் திடீர் என தீப்பற்றி மளமளவென பரவியது.
சிறிது நேரத்தில் சுற்றுப்பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமாக மாறியது.
இதனால், மொய்யணம்படுகை, குப்பிச்சிபாளையம், சீராம்பாளையம், வீராட்சி மங்கலம், துளசி மேட்டுகளம், சுங்கம், உள்ளிட்ட பகுதிகளில் வசித்து வரும் 2000 குடும்பங்கள் மூச்சுத் திணறலால் அவதிக்குள்ளாகினர்.
தீவிபத்து குறித்து சுங்கம் பகுதியைச் சேர்ந்த மக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் அங்கு வந்த நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையிலான பத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், கொழுந்துவிட்டு எரிந்த தீயை அணைக்கப் போராடினர்.
ஆனாலும், தீ கட்டுக்கடங்காமல் பரவிவரும் நிலையில், தீயணைப்பு வாகனத்தில் இருந்த தண்ணீர் முழுவதும் தீர்ந்து விட்டதால் நகராட்சி குடிநீர் வாகனத்தின் மூலம் தண்ணீர் வரவழைக்கப்பட்டு அதை தீயணைப்பு வாகனத்திற்கு மாற்றி மீண்டும் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.
இந்த தீ விபத்துக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.
மேலும், அருகிலுள்ள டிரான்ஸ்பார்மர் மற்றும் மின்கம்பங்களுக்கு தீ பரவாமல் இருக்க மின் செயற்பொறியாளர் பாலன் தலைமையிலான மின் அலுவலர்கள் நஞ்சியம்பாளையம் மற்றும் சுங்கம் பகுதியில் மின்சாரத்தை நிறுத்தி வைத்துள்ளனர். இதனால், ஐந்து கிராமங்களுக்கு மின்விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த தீவிபத்து குறித்து விவசாயி சிவகுமார் கூறுகையில்,
தாராபுரம் நகராட்சி குப்பை கிடங்கு குடியிருப்புகள் மத்தியில் பாதுகாப்பற்ற நிலையில் கடந்த 30 வருடங்களாக இருந்து வருகிறது. இந்த குப்பை கிடங்கில் ஆண்டிற்கு இருமுறை குப்பையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு வருகிறது. அவ்வாறு பற்றி எரியும் தீ தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு எரிவது மட்டும் அல்லாமல், அணைந்த பிறகும் 3 நாட்களுக்கு புகை காற்றில் பரவும்.
இதனால், ஆடு மாடு, கோழி போன்ற உயிரினங்களுக்கு மூச்சு திணறல் ஏற்படுவதோடு, சில கோழிகள் இறந்தும் விடுகிறது. இந்தப் புகை விவசாய நிலங்களில் படுவதால் விவசாய காய்கறிகள், பயிர் வகைகள் முற்றிலும் கருகி விடுகின்றன. ஆடு மாடுகள் சினை பிடிப்பதில் பிரச்சனை ஏற்படுகிறது . எனவே சுங்கம் பகுதியில் உள்ள குப்பை கிடங்கை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும், என்றார்.