கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் ராணுவ வீரர் பிரபு கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து பொள்ளாச்சியில் பாஜக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
கோவை: கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே ராணுவ வீரர்கள் பிரபு மற்றும் பிரபாகர் ஆகிய இருவரையும் திமுக கவுன்சிலர் சின்னச்சாமி உள்ளிட்ட கும்பல் தாக்கியதில், ராணுவ வீரர் பிரபு உயிரிழந்தார். இந்த சம்பவத்தை கண்டித்து, பொள்ளாச்சி நகர பாரத ஜனதா கட்சி சார்பில் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நகரத் தலைவர் பரமகுரு தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், கோவை தெற்கு மாவட்ட தலைவர் வசந்தராஜன் மற்றும் ஒன்றிய நகர நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான பாஜகவினர் கலந்து கொண்டு ராணுவ வீரர் கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், திமுக அரசை கண்டித்தும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
பின்னர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கோவை மாவட்ட தலைவர் வசந்தராஜன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, திமுக தமிழகத்தில் ஆட்சிக்கு வரும் போதெல்லாம் ரவுடிகள், கூலிப்படைகள் அதிகரித்து வருகிறது. கொலை சம்பவங்கள் அதிகளவில் நடைபெறுகிறது. கோவை நீதிமன்ற வளாகத்தில் வெட்டி கொலை செய்யும் சம்பவமும் அரங்கேறியுள்ளது.
தற்போது, இந்திய திருநாட்டின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் ராணுவ வீரர்களை திமுக கும்பல் கொலை செய்த சம்பவம் கண்டிக்கத்தக்கது. இந்த விவகாரத்தில் முதல்வர் மௌனம் காப்பது கண்டனத்துக்குரியது. இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.