ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நடைபெற்ற ஈமு கோழி மோசடி வழக்கில் நிறுவனத்தை நடத்தியவர்களுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையும், 43 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2011-12 ஆம் ஆண்டுகளில் தமிழகத்தில் நடைபெற்ற மிகப்பெரிய ஈமு கோழி மோசடி வழக்கில் 2ஆம் முறையாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் செயல்பட்ட நிதி ஈமு பார்ம்ஸ் என்ற பெயரில் 4நிறுவனம் ஈமு கோழி மூலம் பணம் அதிகமாக சம்பாதிக்கலாம் என கூறி பல்வேறு சலுகை திட்டங்களுடன் முதலீட்டாளர்களிடம் பணம் பெற்றுள்ளது. ஆனால் கூறியப்படி பணத்தை தராததால் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்த அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த வீரமணி என்பவர் அளித்த புகாரின் பேரில் ஈரோடு மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் கடந்த 2012 ஆம் ஆண்டு 3பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து நிறுவனத்தை நடத்தி வந்த சேகர், முனியன், கார்த்திகேயன் ஆகிய மூவரை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு கோவை தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், மோசடி மற்றும் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்பு சட்டம் 5ன் கீழ் ஆகிய இரு பிரிவின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டதாக தீர்ப்பளிக்கப்பட்டது.
மேலும்,மோசடியில் ஈடுபட்ட அனுமதியின்றி நிதி ஈமு பார்ம்ஸ் என்ற பெயரில் செயல்பட்ட 4 நிறுவனத்திற்கும் தலா 4 லட்சத்து 32ஆயிரம் ரூபாய் என மொத்தம் 17 லட்சத்து 28 ஆயிரம் ரூபாயும், நிறுவனத்தை நடத்திய சேகர், முனியன், கார்த்திகேயனுக்கு தலா 8 லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 25 லட்சத்து 92ஆயிரம் ரூபாயும் மொத்தம் 43 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதில், 72 ஆயிரம் ரூபாய் அரசுக்கு அபராதமும், மீதம் 42 லட்சத்து 48ஆயிரம் ரூபாயை பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களக்கு வழங்கவும், முனியன், சேகர், கார்த்திகேயனுக்கு தலா 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி பாபு உத்தரவிட்டதையடுத்து மூவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.