மத்திய அரசின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தை கண்டித்து கோவையில் தமிழக கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் பொதுநலச் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொதுமக்களின் நலனை கருத்தில் கொள்ளாமல், கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக டிராய் செயல்படுவதாக குற்றச்சாட்டினர்.
கோவை: மத்திய அரசின் கீழ் இயங்கும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அமல்படுத்தியுள்ள தேசிய கட்டண கொள்கை-3-ஆல் கட்டண சேனல்களில் கட்டண விலை உயர்ந்துள்ளது. இந்நிலையில், டிராயைக் கண்டித்தும், அக்கட்டணத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தியும்தமிழகம் முழுவதும் தமிழக கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் பொதுநல சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, கோவையில் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவை மாவட்ட பொறுப்பாளர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தை சேர்ந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கட்டண உயர்வை கட்டுப்படுத்த வேண்டியும், டிராய் அமைப்பை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.
டிராய், பொது மக்களின் நலனை கருத்தில் கொள்ளாமல், கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக இந்தப் புதிய கட்டணக் கொள்கையை அமல்படுத்தி கட்டண சேனல்களின் விலையை உயர்த்தி பொது மக்களுக்கு சிரமத்தை அளித்துள்ளதாகவும், இந்தக் கட்டண உயர்வை உடனடியாகக் கட்டுப்படுத்த வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.