கிணத்துக்கடவு பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற விசிக கட்சியின் ஆர்ப்பாட்டத்தில், இரட்டை குவளை முறையை ஒழிக்கவும், பட்டியலின மக்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கவும் வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே பட்டியலின மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்காத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கிணத்துக்கடவு வட்டார பகுதியில் வசிக்கும் பட்டியலின தாழ்த்தப்பட்ட ஏழை, எளிய மக்கள் வீட்டு மனை பட்டா கேட்டு விண்ணப்பித்துள்ளனர். ஆனால், இதுவரை அவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்படவில்ல என கூறப்படுகிறது.
இந்நிலையில் வீட்டு மனை பட்டா வழங்காத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும், இரட்டைக் குவளை முறையை தடுத்து நிறுத்தவும், தென்னை சார்ந்த தொழில்காளர்களுக்கு நல வாரியம் அமைக்க வலியுறுத்தியும் கிணத்துக்கடவு பழைய பேருந்து நிலையம் முன்பு விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை மாவட்ட துணை செயலாளர் சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, கோரிக்கையை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், விசிகவின் மாநில துணை பொதுச் செயலாளர் கனியமுதன், மாவட்ட செயலாளர் சுசி கலையரசன், தெற்கு மாவட்ட செயலாளர்கள் பிரபு, சிவகாமி, விடுதலைச் செல்வன், முகமது அலி உள்ளிட்ட விடுதலை சிறுத்தை கட்சியைச் சேர்ந்த பலர் பங்கேற்றனர்.