கொலை குற்றவாளியான கூடலூரை சேர்ந்த லோகேந்திரன் 16 வருட சிறைவாசத்திற்கு பின் விடுதலையாகி, தள்ளுவண்டி கடை வைக்க உதவி கோரிய நிலையில், அவருக்கு மருத்துவர் மகேந்திரன் என்பவர் ஹோட்டல் வைத்து கொடுத்துள்ளார்.
கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே 16 வருட சிறைவாசத்திற்கு பின் வீடு திரும்பியவருக்கு மறுவாழ்வு பெற ஹோட்டல் வைத்து கொடுத்த மருத்துவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியை சேர்ந்தவர் லோகேந்திரன் இவர் அங்குள்ள தேயிலை தோட்டத்தில் கூலி தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணம் ஆகி வசந்தா என்ற மனைவியும் பிரவீன், பிரசாத் என இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 16 வருடங்களுக்கு முன் தேயிலை தோட்டத்தில் வேலை பார்த்து கொண்டிருந்த போது ஈஸ்வரன் என்பவருடன் ஏற்பட்ட அடிதடி மோதலில் லோகேந்திரன் தள்ளியதில் ஈஸ்வரன் உயிரிழந்தார்.
இதனையடுத்து லோகேந்திரன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கபட்டார். இதில் லோகேந்திரனுக்கு 16 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்தது. இதனிடையே லோகேந்திரன் சிறைக்கு செல்லும் போது அவரது இரண்டு மகன்களும் கை குழந்தைகளாக இருந்துள்ளனர்.
கணவன் சிறையில் அடைக்கப்பட்டதால் அவரது மனைவி, கைக் குழந்தைகளுடன் வாழ்வாதாரத்திற்கு மிகவும் சிரமப்பட்டு குழந்தைகளை வளர்த்து வந்தார். இந்த நிலையில் 16 ஆண்டுகள் சிறை வாழ்க்கை முடிந்து வெளியே வந்த லோகேந்திரன் அடுத்தது தனது வாழ்க்கையை எப்படி ஆரம்பிப்பது என தெரியாமல் இருந்துள்ளார்.
சிறை சென்றவர் என கூறி புறக்கணிப்பார்களே என நினைத்து கவலைப்பட்டு வந்த அவர், பல நபர்களிடம் உதவி கேட்டு அணுகியுள்ளார். அப்படி நண்பர் ஒருவரின் வழிகாட்டுதலுடன் மேட்டுப்பாளையத்தில் உள்ள மருத்துவர் மகேஸ்வரன் என்பவரை சந்தித்து உதவி கேட்டுள்ளார்.
தனது குடும்ப நிலை, குழந்தைகளின் எதிர்காலம் ஆகியவற்றை கூறி பிழைப்பிற்காக லோகேந்திரன் தள்ளு வண்டி கடை ஒன்று வைக்க உதவி கேட்ட நிலையில், அவரது சூழ்நிலையை எண்ணியும் கொலை குற்றவாளியாக இருந்தும் மறுவாழ்வு பெற உழைக்க வேண்டும் என்னும் அவரது நல்ல குணங்களை புரிந்து அந்த மருத்துவர் லோகேந்திரனுக்கு சிறிய ஹோட்டல் ஒன்றை வைத்து கொடுத்துள்ளார்.
மேட்டுப்பாளையத்தில் உள்ள பாரதிநகர் பகுதியில் அதற்காக இடத்தை தேர்வு செய்து சுமார் ஒரு லட்சத்திற்கும் மேல் செலவு செய்து உணவகம், தேநீர், வடை, போண்டா என சகல வசதிகளுடன் கூடிய ஹோட்டல் வைத்து கொடுத்துள்ளார்.

இந்நிலையில், இன்று அந்த கடையின் திறப்பு விழா நடைபெற்றது. இதில் மருத்துவர் மகேஸ்வரன் மற்றும் லோகேஸ்வரன் குடும்பத்தார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.