தமிழ்நாட்டில் இந்தி பேசியதற்காக 12 பீகார் தொழிலாளர்கள் கொலை செய்யப்பட்டதாக, சமூக வலைதளத்தில் தவறான தகவலைப் பரப்பிய உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக செய்தி தொடர்பாளர் பிரசாந்த் உமாராவ் என்பவர் மீது தமிழக போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை: தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் வதந்தியைப் பரப்பிய பாஜக செய்தி தொடர்பாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வீடியோக்கள் சமூகவலைதளங்களில் பரப்பப்பட்டன. இது தமிழ்நாட்டில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
விசாரணையில், இந்த வீடியோக்கள் போலியானது என்றும், இந்த வீடியோகளுக்கும் வடமாநில தொழிலாளர்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று பின்னர் உறுதி செய்யப்பட்டது.
தற்போது, தமிழ்நாட்டில் இந்தி பேசியதால் 12 பீகார் தொழிலாளர்கள், கழுத்தறுத்து கொல்லப்பட்டதாக சமூகவலைதளங்களில் தவறான தகவலை பரப்பிய உத்தர பிரதேச மாநிலம், பாஜக செய்தி தொடர்பாளர் பிரசாந்த் உமாராவ் என்பவர் மீது தமிழக காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பியது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாகப் பொய்யான தகவல் பரவியதை அடுத்து, காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. வெளிமாநில தொழிலாளர்கள் தமிழ்நாடு காவல்துறையை தொடர்பு கொள்ள 0421-2203313, 9498101300, 9498101320 உதவி எண்களை வெளியிட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக, தமிழக அரசும், பீகார் அதிகாரிகளும் இன்று மாலை ஆலோசனை நடத்துகின்றனர். மறுபக்கம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.