கோவை பூண்டி வெள்ளியங்கிரி மலைத்தொடரின் 4 மற்றும் 5வது மலைகளுக்கு இடையேயான வனப்பகுதியில் காட்டுத்தீ பரவிய நிலையில், பொதுமக்கள் உதவியுடன் தீயை கட்டுப்படுத்தும் பணியில் வனத்துறையினர் 2வது நாளாக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை: கோவை வெள்ளியங்கிரி மலையில் ஏற்பட்ட காட்டுத் தீயை வனத்துறையினர், பழங்குடி மக்கள் உதவியுடன் அணைக்கும் பணியில் இரண்டாவது நாளாக ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை பூண்டி வெள்ளியங்கிரி மலைத் தொடரின் 4 மற்றும் 5ஆவது மலைகளுக்கு இடையே உள்ள வனப்பகுதியில் நேற்று மாலை திடீரென காட்டு தீ ஏற்பட்டது. சுமார் 3ஹெக்டர் பரப்பளவில் பரவிய தீயினை சுமார் 30-க்கும் மேற்பட்ட போளுவாம்பட்டி வனத்துறை ஊழியர்கள், உள்ளூர் பழங்குடி மக்கள் உதவியுடன் தீயை அணைக்கும் பணியைத் துவங்கினர்.
தற்போது வெள்ளியங்கிரி மலைக்குப் பக்தர்கள் சென்று வரும் சூழலில் 7ஆவது மலையிலிருந்து சுவாமி தரிசனம் முடித்து கீழே வரும் பக்தர்கள் கீழே இறங்க முடியாமல் சிக்கியுள்ளனர். மேலும் காட்டு தீ காரணமாக வெள்ளியங்கிரி நுழைவு வாயிலிலேயே பக்தர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு மலை ஏற அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.
மேலும் தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இரவு முழுவதும் போராடி 4ஆவது மலையில் பிடித்திருந்த தீயை முழுமையாக அணைத்தனர். இதனிடையே தீயணைப்புத் துறையினரும் வெள்ளியங்கிரி மலையின் 5ஆவது மலையில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயை அணைக்கும் பணியை இரண்டாவது நாளாக தீவிரப்படுத்தியுள்ளனர்.