வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளையும் கைப்பற்ற உழைக்க வேண்டும் - தொண்டர்களுக்கு ஊக்கமளித்த உதயநிதி

கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற்ற நிகழ்வில் திமுகவின் மூத்த முன்னோடிகள் 2,000 பேருக்கு அமைச்சர் உதயநிதி பொற்கிழிகளை வழங்கினார். இதில் பேசிய அவர், நாடாளுமன்ற தேர்தலில் நாற்பதும் நமதே நாடும் நமதே என்பதை மனதில் கொண்டு உழைக்க வேண்டும் என தொண்டர்களுக்கு ஊக்கமளித்தார்.



கோவை: வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக 40 இடங்களையும் கைப்பற்றும் வகையில் தொண்டர்கள் உழைக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கோவை கொடிசியா மைதானத்தில் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக சார்பில் 2000 திராவிட முன்னேற்றக் கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.



மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.



மேலும் இக்கூட்டத்தில் 2000 மூத்த முன்னோடிகளுக்கு 10,000 ரூபாய் பொற்கிழிகளை வழங்கினார். முன்னதாக நிகழ்ச்சிக்கு வருகை தந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மூத்த முன்னோடிகளுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.



இந்நிகழ்வில் விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, கலைஞர் பேரில் அமைத்துள்ள அறக்கட்டளையில் 4 கோடி ரூபாயை வைப்பு நிதியாக வைத்து அதில் வரும் வட்டி தொகையை மாதம் தோறும் கழக மூத்த முன்னோடிகள் 8 பேருக்கு வழங்கப்பட்டு வருகிறது. மாதம் 8 பேருக்கு 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.



அதன்படி இதுவரை 4078 பேருக்கு 5 கோடியே 67 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பொற்கிழி வழங்குகின்ற நிகழ்ச்சியை பொருத்தவரை, முதல் நிகழ்ச்சி கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தில் நடைபெற்றது அதில் 200 மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழிகள் வழங்கப்பட்டு 5,000 ரூபாயும் அதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் 1500 மூத்த முன்னோடிகளுக்கு தலா 10,000 ரூபாய் வழங்கப்பட்டது.

தஞ்சை மாவட்டத்தில் 1000 பேருக்கு தலா 5,000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. அதனை அடுத்து காஞ்சி வடக்கு மாவட்டம் காஞ்சி தெற்கு மாவட்டம் சென்னை மேற்கு மாவட்டம் வேலூர் மத்திய மாவட்டம் நாமக்கல் கிழக்கு மாவட்டம் நாமக்கல் மேற்கு மாவட்டம் சேலம் மேற்கு மாவட்டம் திருவண்ணாமலை வடக்கு மற்றும் தெற்கு மாவட்டம் திண்டுக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டம் மதுரை மாவட்டம் என இந்த ஒரு வருடத்தில் குறைந்தது 20 இடங்களில் பயணம் செய்து சுமார் 20,000 பேருக்கு 20 கோடி ரூபாய் கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழியாக வழங்கப்பட்டுள்ளது.

நேற்று கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 1,270 பேருக்கு தல 10,000 ரூபாய் பொருட்களை வழங்கப்பட்டுள்ளது. இன்று கோவை மாவட்டத்தில் 2,000 கழக மூத்த முன்னோடிகளுக்கு தலா 10,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இந்தியாவிலேயே எந்த கட்சியும் செய்யாத முயற்சி இது.

வேலை என்று வந்துவிட்டால் வெள்ளைக்காரன் என பலமொழி கூறுவார்கள் நான் அதனை கரூரில் மாற்றி கூறினேன் "கட்சி வேலை, தேர்தல் வேலை, கழக வேலை என வந்து விட்டால் அது செந்தில் பாலாஜி தான்" என நேற்று கரூரில் கூறினேன். அதற்கு ஒரு மிக சிறந்த எடுத்துக்காட்டுத் தான் இந்த நிகழ்ச்சி.

பிற மாவட்ட செயலாளர்கள் எல்லாம் பொறாமைப்படும் அளவிற்கு செந்தில் பாலாஜி செயல்பட்டு வருகிறார். மேலும் இளைஞர் அணியை எடுத்துக்கொண்டால் அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. மாவட்ட கழகம் சார்பிலும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது,

நான் இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்ற பிறகு, கழகத்தின் சார்பில் ஏதேனும் ஒரு நிகழ்ச்சிக்கு அவர்கள் அழைத்தால் அங்கு செல்வதற்கு 1000 ரூபாய் அங்கு உண்பதற்கு 500 ரூபாய் இவ்வாறு இளைஞர் அணிக்கு வளர்ச்சி நிதி வாங்கி சுமார் 4 கோடி ரூபாய் வசூல் செய்து வங்கியில் வைப்பு நிதியாக வைத்து அதில் வருகின்ற வட்டித் தொகையை இளைஞர் அணி சார்பில் மருத்துவ செலவிற்கும் கல்வி செலவிற்கும் கொடுக்க இருக்கிறோம் என அறிவித்துள்ளோம்.

இதன் அடிப்படையில், நாமக்கல் மாவட்டத்தில் 21 பேர், சேலம் மாவட்டத்தில் 21 பேர் கரூர் மாவட்டத்தில் 12 பேர் இன்று கோவையில் 16 பேர் என மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களுடைய கல்வி செலவு மற்றும் மருத்துவ செலவிற்கென இந்த ஒரு மாதத்தில் மட்டும் 70 பேருக்கு 17 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் இளைஞர் அணியின் சார்பில் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இதனை அதிகப்படுத்துவேன், தொடர்ந்து செய்வேன். சுற்றுப்பயணம் செய்யும் போதும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போதும் பிளக்ஸ் பேனர்கள் வைக்க வேண்டாம், பட்டாசுகள் வெடிக்க வேண்டாம், ஆடம்பர ஏற்பாடுகள் செய்ய வேண்டாம், பூங்கொத்துகள் வேண்டாம், பொன்னாடைகள் அணிவிக்க வேண்டாம் தங்களால் முயன்ற தொகையை இளைஞர் அணி வளர்ச்சி திட்ட பணிகளுக்காக தாருங்கள்.

தாங்கள் கொடுக்கின்ற நீதி கடைக்கோடி தொண்டன் இடத்தில் சேரும் என்று நான் வேண்டுகோள் வைத்திருக்கிறேன். இதனை தற்போது மீண்டும் இளைஞரணி தம்பிகளுக்கும் நிர்வாகிகளுக்கும் நினைவுபடுத்துகிறேன்.

சட்டமன்றத் தேர்தலின் போது கோவை மாவட்டத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தோம், இருப்பினும் திமுக வெற்றிப்பெற்ற பின் முதலமைச்சர் திமுகவிற்கு வாக்களித்தவர்கள் பெருமைப்பட வேண்டும், வாக்களிக்காதவர்கள் திமுகவிற்கு வாக்களிக்க தவறிவிட்டேன் என்ற எண்ணம் வருகின்ற வகையில் செயல்படுவேன் என தெரிவித்திருந்தார். அந்த வாக்குறுதியை நிறைவேற்றுகிறாரா? இல்லையா?.

முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு ஆறு முறை கோவை மாவட்டத்திற்கு வருகை புரிந்து, நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளார். அதன் மூலம் 1 லட்சத்து 32 ஆயிரம் பேர் அரசின் நலத்திட்ட உதவிகள் பெற்றுள்ளனர். திமுக ஆட்சி அமையும் போது கோவிட் பெருந்தொற்று இரண்டாம் அலை உச்சத்தில் இருந்தது.

அதற்கு முன் பத்தாண்டு காலம் இருந்த அதிமுக ஆட்சி கஜானாவை காலி செய்து 5 லட்சம் கோடி ரூபாய் கடனை வைத்து சென்றது. கோவிட் முதல் அலை இருக்கின்ற வேளையில், ஒன்றிய பிரதமர் மோடி, அனைவரும் வீட்டை விட்டு வெளியில் வாருங்கள் பாத்திரத்தை எடுத்துக் கொண்டு தட்டுங்கள் அந்த சத்தத்தை கேட்டு கோவிட் சென்றுவிடும் வீட்டில் அனைவரும் விளக்கேற்றுங்கள் என கூறினாரா இல்லையா.

அவ்வாறு செய்யும்பொழுது கோவிட் சென்றதா? நம்முடைய ஆட்சி அமைந்த பிறகு அதற்கான மருத்துவத்தை மக்களிடம் கொண்டு சேர்த்து மக்களை காத்த அரசுதான் திமுக அரசு. அதனைத் தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தல் வருகின்ற வேளையில் நான் இங்கு பிரச்சாரம் மேற்கொண்ட போது சட்டமன்ற தேர்தலில் தான், எங்களை ஏமாற்றி விட்டீர்கள் உள்ளாட்சி தேர்தலில் நீங்கள் மிகப்பெரிய வெற்றியை அளித்தால் நான் மாதம் ஒருமுறை கோவைக்கு வருகை தருவேன் என கூறினேன்.

அதேபோல் கோவை மக்கள் நீங்கள் உள்ளாட்சித் தேர்தலில் 97 சதவிகிதம் வெற்றியை பெற்று தந்தீர்கள், கோவை அதிமுகவின் கோட்டை அல்ல திமுகவின் கோட்டை தான் என நிரூபித்து காட்டியது தான் கடந்த உள்ளாட்சித் தேர்தல். இதற்கெல்லாம் காரணம் நீங்கள் தான். முதலமைச்சர் ஆட்சி பொறுப்பேற்கும் போது எதிர்க்கட்சியினர் திமுக அளித்த வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்ற முடியாது எனக் கூறினார்கள்.

ஆனால் முதலமைச்சர் பொறுப்பேற்ற பின்பு போட்ட முதல் கையெழுத்து மகளிர்க்கு கட்டணமில்லா பேருந்து. அதன்படி இதுவரை, தமிழகத்தில் 250 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. கொரோனா நிவாரண தொகையாக குடும்ப அட்டை தாரர்களுக்கு நான்காயிரம் ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்திருந்தார் அதனையும் அடுத்தடுத்து வழங்கினார்.

ஒன்றரை லட்சம் விவசாயிகளுக்கு இலவசம் மின் வசதி, மக்களை தேடி மருத்துவம், மகளிர் சுய உதவிக் குழுக்கள் வாங்கிய கடன் தள்ளுபடி நகை கடன் தள்ளுபடி நம்மை காக்கும் 48 என்ற திட்டம் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி உணவு திட்டம் என பல்வேறு திட்டங்களை அளித்துள்ளார்.

நான் தற்பொழுது பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதால் காலை உணவை பள்ளிகளில் தான் அருந்துகிறேன். மேலும் முதலமைச்சர் திட்டங்களை அறிவித்ததுடன் மட்டும் இல்லாமல் தினமும் அந்தந்த அலுவலர்களை அழைத்து அத்திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்கிறார்.

திட்டங்களை செயல்படுத்தாத அலுவலர்களை உடனடியாக பணியிட மாற்றம் செய்து உத்தரவிடுகிறார். இதுபோன்ற செயல்களுக்கு கிடைத்தது தான் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வெற்றி. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலின் போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அங்கேயே குடியிருந்தார். ஆனால் நம்முடைய முதலமைச்சர் ஒரு நாள் தான் சென்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

பின் அங்கு நடந்தது, 66 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை கிழக்கு தொகுதி மக்கள் கொடுத்திருக்கிறார்கள். இப்போது தேர்தல் முடிந்து விட்டது அதிமுக வினர் ஒருவர் கூட வெளியில் வர மாட்டார்கள். அதிமுகவினர் கட்சியில் ஏதேனும் பிரச்சினை இருந்தால் மட்டும் வெளியில் வருவார்கள்.

ஜெயலலிதா அம்மையார் இறந்த பிறகு 4 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தார்கள், அப்போது ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இருவரும் கூட்டு களவாணிகளாக இருந்தார்கள். ஆட்சியில் இருக்கின்ற வரை நீர் முதலமைச்சர் நான் துணை முதலமைச்சர், நீர் ஒருங்கிணைப்பாளர் நான் துணை ஒருங்கிணைப்பாளர் என கூறி வந்தார்கள்.

இருவரும் கமலாலயம் வாசலில் காத்துக் கொண்டிருந்தார்களா? இல்லையா?, ஏனென்றால் அவர்கள் பாஜகவின் அடிமைகள். பாஜகவின் கண் அசைவு இல்லாமல் அதிமுகவில் எதுவும் நடக்காது. கடந்த ஜனவரி ஒன்பதாம் தேதி சட்டமன்றத்தில், ஆளுநர் உரையாற்றிய பின்பு அவரே வெளியேறி விட்டார்.

இங்குள்ள ஆளுநர் அவரது இஷ்டபடி சிலவற்றை நீக்கி விட்டும் சிலவற்றை சேர்த்தும் பேசினார். அப்போது நம்முடைய முதலமைச்சர் தைரியமாக எழுந்து நின்று ஆளுநரிடம் நீங்கள் கூறியது எல்லாம் சட்டப்பேரவையில் ஏறாது உங்கள் மீது நம்பிக்கையில்லாத தீர்மானம் கொண்டு வருகிறேன் என தெரிவித்த போது ஆளுநருக்கு ஒன்றும் புரியவில்லை,

பின்னர் ஆளுநர் எழுந்து சென்றார் அதற்கு முன்பு இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இருவரும் பயந்து எழுந்து சென்றார்கள். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின் போது பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறி விடுவார்களோ என்ற பயம் இருந்தது. ஆனால் அந்த கூட்டணி உறுதியான பின்பு தான் நமது வெற்றியும் உறுதியானது.

அந்த அளவிற்கு பாஜகவை தமிழக மக்கள் வெறுக்கிறார்கள். இது போன்ற வெறுப்பு அரசியல் செய்தால் மக்கள் என்றென்றும் உங்களை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். பாஜக என்பது ஆடியோ வீடியோ கட்சி. அங்கு இரண்டு தரப்பினர் இருந்து கொண்டு வெளிப்படையாக ஒருவருக்கொருவர் மிரட்டி கொள்வார்கள், இப்படிப்பட்ட கட்சியை எங்கேனும் பார்த்து உள்ளீர்களா?.

பொதுவாக ஒரு கட்சியில் இருந்து விலகி வேறு கட்சிக்கு செல்வோர், தனக்கு உரிய அங்கீகாரம் தரப்படவில்லை எனக்கு சீட்டு வழங்கவில்லை என்று தான் கூறுவார்கள், இன்று பாஜகவில் இருந்து விலகிச் சென்ற பொறுப்பில் இருக்கும் ஒருவர் கட்சியின் தலைவரை, எங்களுடைய தலைவர் ஒரு 420, பாஜகவின் தலைவர் மன நலம் குன்றியவர் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சமூக வலைத்தளங்களில், தமிழர்களாகிய நாம் எல்லாம் வட மாநிலத்தவர்களை விரட்டுகின்றோம் என பொய் பரப்புகிறார்கள், இது போன்ற பொய் பரப்பும் நபர்களுக்கு சரியான நேரத்தில் முதலமைச்சரும் மக்களும் அடி தருவார்கள். திமுகவில் இளைஞர் அணி சார்பில் பயிற்சி பாசறை கூட்டம் நடத்தினோம். அது திராவிட இயக்க வரலாறு மற்றும் மாநில சுய ஆட்சி என்ற இரு தலைப்புகளில் நடத்தப்பட்டது.

மேலும் தற்போது ஃபிளாஷ்பேக் என்ற ஒன்றை துவக்கியுள்ளோம் அதில் பேரறிஞர் அண்ணா கலைஞர் உடன் எடுத்த புகைப் படங்களை மக்கள் அனுப்பி வருகின்றனர் அதனை எல்லாம் பார்க்கின்ற போது தான் நம்முடைய வரலாறு எவ்வளவு நீண்ட வரலாறு என தெரிகிறது. கழக மூத்த முன்னோடிகள் ஆகிய நீங்கள் தான் கழகத்தின் ஆணிவேர், கழகத்தின் ரத்த ஓட்டம்.

இத்தனை ஆண்டுகளாக கழகத்தைக் கட்டி நிற்பவர்கள் நீங்கள். உங்களுடைய பாத மலர்களை நான் தொட்டு வணங்குகின்றேன். இளைஞர்களாகிய எங்களை நீங்கள் வழிநடத்துங்கள். வருகின்ற 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் நாம் வெற்றி பெற வேண்டும் என முதல்வர் கூறி இருக்கிறார் அதற்காக இன்றிலிருந்து நாம் செயல்படுவோம். நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மிகப்பெரிய வெற்றியடைய வேண்டும்.

இந்த முறை 40க்கு 40 தொகுதியையும் வென்றெடுப்போம் நாற்பதும் நமதே நாடும் நமதே. நான் என்றும் உங்களுடைய செல்லப் பிள்ளையாகவும் பேர பிள்ளையாகவும் இருந்து பணியாற்றுவேன். 

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

சனாதன சர்ச்சை: உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட மூவர் மீது நடவடிக்கை கோரி கோவையில் இந்து மக்கள் கட்சி புகார்

மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பேசியதாகக் கூறி, உதயநிதி ஸ்டாலின், தவெக எம்.எல்.ஏ முஸ்தபா மற்றும் காங்கிரஸ் நிர்வாகி...

707 Kg of Banned Gutka Products Seized in Palladam; Two Arrested

Palladam police seized approximately 707 kilograms of banned gutka products allegedly transported from Karnataka into Ta...

பல்லடத்தில் 707 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல்; இருவர் கைது

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 707 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர...

கவுண்டம்பாளையம் தொகுதி தேவைகளுக்காக சட்டமன்றத்தில் குரல் கொடுப்பேன் - எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ்

கவுண்டம்பாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ், பதவியேற்புக்க...

கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் M Sivaguru Prabhakaran கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை நேரில் ஆய்வு செய்தார். மாணவர்க...

பொது போக்குவரத்து வாகனங்களில் GPS மற்றும் Emergency பொத்தான் பொருத்த உச்ச நீதிமன்றம் கட்டாய உத்தரவு

பயணியர் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு மற்றும் தனியார் பொது போக்குவரத்து வாகனங்களில் GPS கருவி மற்றும் Emergency பொத்தான் க...