தமிழக சட்டமன்றத்திற்கு நித்ய கண்ட பூர்ணாயிச்சு தான் எனவும், ஒவ்வொரு நாளும் சோதனைகளை சந்தித்து தான் பொறுப்பை நீடிக்க முடியுமெனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
கோவையை அடுத்த சின்னியம்பாளையம் பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சூலூர் வட்டார மாநாடு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அக்கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய தா.பாண்டியன், தற்போது தமிழகத்தில் நடக்கும் சம்பவங்கள் 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மத்திய பாஜக அரசினால் நடத்தப்படுபவை என குற்றம்சாட்டினார்.
முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு இருந்த மக்கள் செல்வாக்கு தற்போது சட்டமன்றத்தின் உள்ளே இருப்பவர்களுக்கு இல்லை எனவும், தற்போது முதலமைச்சர் பொறுப்பு என்பது மலர்கீரிடம் அல்ல, அது முட்கீரிடம் எனவும் அவர் கூறினார்.
மேலும், இனிமே தமிழக சட்டமன்றத்திற்கு நித்ய கண்ட பூர்ணாயிச்சு தான் எனவும், ஒவ்வொரு நாளும் சோதனைகளை சந்தித்து தான் பொறுப்பை நீடிக்க முடியுமெனவும் அவர் தெரிவித்தார்.
சட்டமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது உடல் வலிமையின் பலத்தை காட்டக்கூடாது எனவும், தங்களுக்கு சட்டப்படி வழங்கப்பட்ட வாக்குரிமையை மட்டுமே பயன்படுத்தி இருக்க வேண்டுமெனவும் கூறிய அவர், ரகசிய வாக்கெடுப்பு என்று இல்லாமால் எப்படி வாக்கெடுப்பு நடத்தியிருந்தாலும் அந்தந்த கட்சிக்கு உள்ள பலம் தான் நிருபீக்கப்பட்டு இருக்குமெனவும் தெரிவித்தார். மேலும், எதிர்கட்சிகள் இல்லாமல் நடத்தப்பட்ட வாக்கெடுப்பு செல்லாது என சொல்ல முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.
முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமி மக்கள் நலனை தவிர தனக்கு எதுவும் இல்லை என நற்பெயர் எடுப்பதே தனது நோக்கம் எனவும், பணம் சேர்ப்பது அல்ல என மக்களை திருப்தி படுத்தும் வகையில் செயல்பட வேண்டுமெனவும், முதலமைச்சர் அண்டை மாநிலங்களுடனான நதிநீர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தா.பாண்டியன் தெரிவித்தார்.