கோவையில் எல்காட் கட்டுமான பணிகள் ஏப்ரல் இறுதிக்குள் நிறைவடையும்..! - அமைச்சர் ஏ.வ.வேலு நம்பிக்கை

கோவையில் எல்காட் கட்டுமான பணிகள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் ஏ.வ.வேலு, ஆட்சி பெறுப்பேற்றதில் இருந்தே முதல்வர் மு.க.ஸ்டாலின் இளைஞர்களுக்கும், பட்டதாரிகளுக்கும் வேலைவாய்ப்பை உருவாக்கித்தர செயல்பட்டு வருகிறார் என்று தெரிவித்தார்.



கோவை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவியேற்றதில் இருந்து இளைஞர்களுக்கும், பட்டதாரிகளுக்கும் வேலைவாய்ப்பை உருவாக்கித்தர செயல்பட்டு வருகிறார் என அமைச்சர் ஏ.வ.வேலு தெரிவித்துள்ளார்.



விளாங்குறிச்சி பகுதியில் உள்ள தகவல் தொழில்நுட்ப வளாகத்தில், கூடுதல் கட்டிடத்தின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.



இந்த கட்டுமான பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



அப்போது, அங்கு பயன்படுத்தப்படும் பொருட்களின் தரம், கட்டிட அமைப்பு ஆகியவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.



மேலும் இந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தினார்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஏ.வ.வேலு பேசியதாவது,



தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆட்சி பொறுப்பேற்ற காலத்தில் இருந்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தர வேண்டும், படித்த பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு தர வேண்டும் என செயல்பட்டு வருகிறார்.

இதன் அடிப்படையில் இன்று பல்வேறு வெளிநாடுகளில் இருந்து முதலீட்டாளர்களை அழைத்து ஒப்பந்தங்கள் போடப்பட்டு தமிழ்நாட்டில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை தந்து கொண்டிருக்கிறார். கோவை மாவட்டத்தில் பல்வேறு பொறியியல் பட்டதாரிகள் இருக்கின்ற பகுதி.

இங்கு நீண்ட நாட்களாக எல்காட் மூலமாக தகவல் தொழில் நுட்ப கட்டிடம் கட்டப்பட்டு கால தாமதம் ஏற்பட்டது. இதனையடுத்து முதல்வர் உடனடியாக கோவை சென்று ஆய்வு நடத்தி விரைவாக இப்பணிகளை முடித்திட வேண்டும் என ஆணையிட்டதன் அடிப்படையில் நான் ஆய்வு மேற்கொண்டு உள்ளேன்.

114 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் 6 தளங்கள் கொண்ட கட்டிடமாக உருவாகி வருகிறது. மின் தூக்கி, தீயணைப்பு வசதி, இடிதாங்கி வசதி, ஜெனரேட்டர் வசதிகள், வாகன நிறுத்த வசதி போன்ற அனைத்தையும் உள்ளடக்கிய கட்டிடமாக இது அமைந்துள்ளது. இங்கு ஏறத்தாழ 26 நிறுவனங்களுக்கு இடம் ஒதுக்க முடியும்.

இதன் காரணமாக 14,000 பட்டதாரிகளுக்கும், இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பை உருவாக்கித்தர முடியும். எனவே இதனை விரைந்து முடிக்க வேண்டும் என கேட்டு இருக்கிறேன். ஏப்ரல் மாதம் 30ஆம் தேதிக்குள் இதை கட்டி முடித்து தருவதாக கூறியுள்ளார்கள்.

தினமும் நடைபெறும் பணிகள் குறித்த அறிக்கையை எனது அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் எனவும் கூறியிருக்கிறேன். மேலும் கோவை மாவட்டத்தில் ஐடி கம்பெனிகள் கட்டுவதற்கு கூடுதல் இடங்கள் தேவைப்படும் பட்சத்தில் முதலமைச்சருடன் கலந்து பேசி அரசு இடங்கள் இருந்தால் அதில் கட்டிடங்களை கட்டலாம் அல்லது தனியார் இடங்கள் கையகப்படுத்தப்பட்டு கட்டிடம் கட்டித் தரப்படும்.



இளைஞர்களுக்கும், பட்டதாரிகளுக்கும் வேலை வாய்ப்பு வழங்கிட வேண்டும் என்ற இலக்கை வகுத்துக் கொண்டு முதலமைச்சர் செயல்பட்டு கொண்டிருக்கிறார். இரண்டாம் நிலை நகரங்களில் ஐடி செட்டர்களுக்கான வாய்ப்புகள் குறித்த கேள்விக்கு, தமிழ்நாட்டில் தான் பொறியியல் பட்டதாரிகள் அதிகமாக இருக்கிறார்கள்.

கலைஞர் முதலமைச்சராக இருந்த போது தான் ஓ.எம்.ஆர் சாலையில் முதல் முதலாக டைட்டில் பார்க் கட்டி பல்வேறு பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது. கலைஞரின் தொலைநோக்கு பார்வையினால் தான் கோவை,மதுரை போன்ற மாவட்டங்களில் ஐடி கம்பெனிகள் கட்டப்பட்டு வருகிறது. மேலும், வேலூர் போன்ற மாவட்டங்களிலும் இதனை விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.

தேவைப்பட்டால் தமிழ்நாடு முதலமைச்சர் அந்தந்த மாவட்ட தலைநகரங்களிலும் இதனை கொண்டு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.



இந்த ஆய்வின் போது கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி, கோவை மாநகராட்சி ஆணையளர் பிரதாப் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Newsletter

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...