கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்சுணன் ஹூசூர் சாலையில் உள்ள தனது சட்டமன்ற அலுவலகத்தில் இன்று பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது, அதிமுக கட்சி உறுப்பினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் பேசுகிறேன் என்ற பெயரில் தன்னையும் தன் குடும்பத்தினரையும் சிலர் அவதூறாக அலைபேசியில் பேசுவதாகவும், இதனால் தான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும் கூறினார்.
மேலும், திமுக-வை சேர்ந்த சிலரே இச்செயலில் ஈடுபட்டுள்ளதாக தான் நம்புவதாகவும், தனக்கு வந்த அழைப்புகளின் விவரம் தன்னிடத்தில் உள்ளதால் அவதூறாக பேசியவர்கள் மீது காவல் ஆணையரிடம் புகார் அளிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், சட்டமன்ற வாக்கெடுப்பில் பங்கேற்று விட்டு இன்று காலை கோவை திரும்பியதாகவும் வந்த உடனே மக்களை சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்ததாக கூறியவர், பொதுமக்கள் அதிமுக என்ற கட்சிக்கே வாக்களித்தனர் என்றும் அவர்களது தேவைகளை சட்ட மன்ற உறுப்பினர் என்ற முறையில் தனக்கு வாக்களித்த பொதுமக்களுக்கு செய்வேன் என்றார்.