வால்பாறை காவல் நிலையத்திற்குள் நுழைந்த 8 காட்டு யானைகளை, போலீசார் சத்தமிட்டு விரட்டியதால் தேயிலை தோட்டம் வழியாக மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றன. யானைகள் காவல் நிலையத்திற்கு நுழைந்த காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே தமிழக கேரளா எல்லையில் அமைந்து உள்ள மலுக்கைபாறை எஸ்டேட் பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.
காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி சாலையில் நின்று அதிரப்பள்ளி பகுதிக்கு செல்லும் வாகனங்களை வழிமறித்து இடையூறு செய்வது அடிக்கடி அரங்கேறிவருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர்.
இந்த நிலையில், நேற்று இரவு சுமார் 12 மணி அளவில் மலுக்கைபாறை எஸ்டேட் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த எட்டு காட்டு யானைகள் வால்பாறை சாலையில் நடந்து வந்துள்ளது.
அப்பொழுது காவல் நிலையம் மற்றும் குடியிருப்பு பகுதியில் யானைகள் வரும்பொழுது எதிரே வாகனம் வந்ததால் காட்டு யானைகள் காவல் நிலையத்திற்குள் நுழைந்தது.
சிறிது நேரம் காவல் நிலையத்தில் சுற்றிய யானைக் கூட்டத்தை, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் சத்தம் போட்டதால், தேயிலைத்தோட்டம் வழியாக மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றன.
காவல் நிலையத்திற்கு நள்ளிரவில் திடீரென யானைக் கூட்டம் நுழைந்த சம்பவம் வால்பாறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யானைகள் காவல் நிலையத்திற்கு நுழைந்த காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அடிக்கடி வனப்பகுதியிலிருந்து காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகள் நுழைவதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.