கோவை உக்கடம் மீன் மார்க்கெட் அருகில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வரும் நிலையில், அங்குள்ள சிமெண்ட் குடோனில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் அப்பகுதியே புகை மூட்டமாக காட்சியளித்தது.
கோவை: கோவை உக்கடம் பைபாஸ் சாலையில் அமைந்துள்ள மீன் மார்க்கெட்டில் காலை நேரங்களில் மக்கள் நடமாட்டத்துடன் பரபரப்பாக காணப்படும்.
இந்நிலையில், மீன் மார்க்கெட் அருகே அப்பார்ட்மென்ட் கட்டுமான பணிக்காக அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் குடோனில் காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இதையடுத்து, அங்கிருந்த தொழிலாளர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த தெற்கு தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இதற்காக இரும்பு தகர ஓடுகளையும் அகற்றி தீயை முழுமையாக அணைத்தனர். இதனால், மீன் மார்க்கெட்டுகுள் தீ பரவாமல் தடுக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதா ? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.