நேபாளத்தில் லிங்கபைரவி கோவிலை பிராண பிரதிஷ்டை எனும் சக்திவாய்ந்த செயல்முறை மூலம் சத்குரு பிரதிஷ்டை செய்து வைத்தார். இந்தியாவுக்கு வெளியில் முதல்முறையாக நேபாளத்தில் தான் லிங்கபைரவி கோவில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
நேபாளம்: இந்தியாவிற்கு வெளியில் முதல்முறையாக நேபாளத்தில் லிங்கபைரவி தேவி கோவிலை ஈஷா நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் பிரதிஷ்டை செய்து வைத்துள்ளார்.
பெண்மையி சக்திமிக்க வெளிப்பாடான லிங்கபைரவி தேவி கோவிலை நேபாள நாட்டில் சத்குரு ஜக்கி வாசுதேவ் கடந்த மார்ச்.7ஆம் தேதி பிரதிஷ்டை செய்து வைத்தார். இந்தியாவிற்கு வெளியில் முதல் முறையாக லிங்கபைரவி கோவில் நேபாள நாட்டில் தான் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
இது பல்வேறு வழிகளில் சத்குருவிற்கும் நேபாளம் மற்றும் அங்குள்ள மக்களுக்கும் உள்ள ஆழமான தொடர்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக அமைந்துள்ளது.
லிங்கபைரவி தேவியை பிராண பிரதிஷ்டை எனும் சக்திவாய்ந்த செயல்முறை மூலம் சத்குரு பிரதிஷ்டை செய்து வைத்தார். இது உயிர் ஆற்றலை பயன்படுத்தி கல்லை தெய்வமாக மாற்றும் அரிய மறைஞான செயல்முறை ஆகும். லிங்க பைரவியின் ஆற்றல் மனித அமைப்பில் உள்ள மூன்று அடிப்படை சக்கரங்களை பலப்படுத்துகிறது.
இது ஒருவரின் உடல், மனம் மற்றும் சக்தி அமைப்பை உறுதிப்படுத்துகிறது. ஒருவர் வாழ்வின் உடல் மற்றும் பொருள் தன்மையிலான அம்சங்களை பெற, அனுபவிக்க அல்லது கடந்து செல்ல முனைந்தால் அவருக்கு அதையும், அதை தாண்டிய பலவற்றையும் அருள்பவளாக தேவி இருக்கிறாள்.
லிங்கபைரவி குறித்து சத்குரு கூறுகையில், பைரவியின் அருளை பெறுபவர்கள் வாழ்க்கை, மரணம், வறுமை, தோல்வி குறித்த பயத்துடனோ, கவலையுடனோ வாழ வேண்டியதில்லை. மனிதர்கள் நல்வாழ்வு என கருதும் அனைத்தும் பைரவியின் அருளை பெற்றால், அவர்கள் வசமாகும், என்றார்.
மேலும் இது குறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், ஆண் தன்மையின் ஆதிக்கம் அடைதலை குறிக்கிறது. பெண்தன்மை அரவணைப்பால் ஆதிக்கம் செலுத்துகிறது. நேபாளத்தில் தேவியின் பிறப்பு, அன்பு மற்றும் பக்தியின் அற்புதமான வெளிப்பாடாகும்.
இது பெண்தன்மை வழிபாட்டை உயிர்ப்புடன் வைத்திருக்கும். இந்த கலாச்சாரத்தின் செழுமைக்கான அஞ்சலியாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.
நேபாளத்தில் லிங்கபைரவி தேவி கோவில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள இந்த சிறப்பான தருணத்தை குறிக்கும் விதமாக மார்ச் 9 ஆம் தேதி கன்டிபத்தில் உள்ள துண்டிகேலில் இரவு 7 மணி முதல் 9.30 மணி வரை “தேவி உற்சவம்”என்ற நிகழ்வு நடைபெறவுள்ளது.
இந்த பைரவி உற்சவ நிகழ்வானது, சத்குரு யூடுயூப் பக்கத்தில் நேரலையாக ஒளிபரப்பப்படுகிறது. பைரவி உற்சவத்தை https://www.youtube.com/watch?v=PSIrccb6bXI என்ற யூடியூப் லிங்கில் நேரலையாக காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் இசை, நடனம், மற்றும் பக்தி ஆகியவற்றை வெளிப்படுத்தும் ஆழமான கலாச்சார கொண்டாட்டம் நடைபெற இருக்கிறது. இது லிங்கபைரவியின் தீவிரமான ஆற்றல் மற்றும் அருளில் உறைவதற்கும் அனுபவிப்பதற்குமான வாய்ப்பை வழங்குகிறது.
இந்த வேளையில், சத்குரு நடத்தவிருக்கும் சிறப்பு சத்சங்கத்தில் தேவியின் பல்வேறு அம்சங்களை வெளிப்படுத்துவதோடு, பங்கேற்பாளர்களுக்கு சக்தி வாய்ந்த தியானங்களையும் வழி நடத்துகிறார்.
நேபாளத்தில் உள்ள லிங்கபைரவி தேவி, இந்தியாவிற்கு வெளியே பிரதிஷ்டை செய்யப்பட்ட முதல் தேவி கோவில் ஆகும். இந்தியாவில் கோவை ஈஷா யோகா மையம், கோபிசெட்டிப்பாளையம், சேலம் மற்றும் புதுடெல்லி ஆகிய இடங்களில் இந்த லிங்க பைரவி கோவில்கள் அமைந்துள்ளன.
இந்த கோவில்கள் அனைத்தும் தனித்துவமான வகையில் பெண்களால் நிர்வகிக்கப்படுகின்றது. ஆண்கள், பெண்கள் என இருபாலரும் தேவியை தரிசிக்க வருகின்றனர் என்றாலும், பெண்கள் மட்டுமே கருவறைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
இவர்கள் வெவ்வேறு சாதிகள், மதங்கள் மற்றும் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.