திருப்பூர் மாவட்டம் காந்திநகரில் உள்ள தனியார் பள்ளியில், அக்னிபாத் திட்டத்தின் மூலம் ராணுவத்தில் ஆட்சேர்ப்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து ராணுவ ஆட்சேர்ப்பு இயக்குனர் பரத்வாஜ் கலந்து கொண்டு, பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காந்திநகரில் உள்ள தனியார் பள்ளியில், பள்ளி மாணவர்களுக்கு அக்னிபாத் திட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
ராணுவத்தில் ஆட்சேர்ப்பு முறையில் உள்ள மாற்றங்கள் குறித்து கோவை மண்டலத்திற்கு உட்பட்ட 10 மாவட்டங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்றது.
காந்திநகரில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கோவை மண்டல ராணுவ ஆட்சேர்ப்பு இயக்குனர் பரத்வாஜ் மற்றும் துணை இயக்குனர் மதன்லால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் அக்னிபாத் திட்டத்தின் மூலம் இளம் வயதினர் ராணுவத்தில் தங்களை இணைத்து கொள்ளும் வழிமுறைகள் மற்றும் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
இதற்கு முன்பாக உடல் தகுதி தேர்ச்சி பெற்ற பின் எழுத்து தேர்வு நடைபெற்று வந்தது. ஆனால் தற்போது எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்பு உடல் தகுதி தேர்வு செய்யப்படுவது குறித்து விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டது.
மேலும் மாணவர்கள் ராணுவ அதிகாரிகளுடன், கலந்துரையாடி தங்களது சந்தேகங்களை கேட்டு நிவர்த்தி செய்து கொண்டனர். இதில் ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.