கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்களுக்கு குறைத்து வழங்கப்படும் கூலியை ஒரு வார காலத்திற்குள் பெற்று தராவிட்டால் பொது வேலை நிறுத்தம் செய்யப்போவதாக விசைத்தறி உரிமையாளர் சங்க தலைவர் பழனிச்சாமி தெரித்துள்ளார்.

கோவை திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்க தலைவர் பழனிச்சாமி மாவட்ட ஆட்சி தலைவரிடம் மனு ஒன்று அளித்துள்ளார். அதில் 2014ம் ஆண்டு ஜவுளி உற்பத்தியாளர்களுக்கும், விசைத்தறி உரிமையாளர்களுக்கும் இடையே போடப்பட்ட ஒப்பந்தப்படி கூலி வழங்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற பேச்சு வார்த்தை அடிப்படையில் புதிய ஒப்பந்தம் போடப்பட்டு அதன் அடிப்படையில் கூலி வழங்க வேண்டிய ஜவுளி உற்பத்தியாளர்கள், தொழில் மந்த நிலையை காரணம் காட்டி கூலியை குறைத்து வழங்குவதாகவும், இது குறித்து கோவை திருப்பூர் மாவட்ட ஆட்சியர்களுக்கு மனு அளித்தும், எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், தற்போது 2011ம் ஆண்டு வழங்கிய கூலியையும் ஜவுளி உற்பத்தியாளர்கள் பிடித்தம் செய்வதாகவும், உடனடியாக மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஜவுளி உற்பத்தியாளர்கள், விசைத்தறியாளர்கள் என முத்தரப்பு பேச்சு வார்த்தை நடத்தி குறைக்கப்பட்ட கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் ஒரு வார காலத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனில் பொதுக்குழு தீர்மானத்தின்படி கால வரையற்ற பொது வேலை நிறுத்தம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தார்.