கோவை சின்னாம்பதி கிராமம் கொடாம்மேடு பகுதியில் பொதுமக்கள் நடந்து சென்றபோது 13 அடி கொண்ட ராஜநாகத்தை கண்டு அதிர்ச்சியடைந்து வனத்துறை மற்றும் பாம்பு பிடி வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த பாம்புபிடி வீரர்கள், பாம்பை பத்திரமாக பிடித்து சென்று அடர் வனப்பகுதியில் விடுவித்தனர்.
கோவை: கோவை மாவட்டம் சாலையோரத்தில் இருந்த 13 அடி ராஜநாகத்தை பாம்புபிடி வீரர்கள் பத்திரமாக பிடித்து அடர் வனப்பகுதியில் விட்டனர்.
கோடை காலம் நெருங்கி வருவதால், அடர் வனப்பகுதிகளில் இருந்து வன விலங்குகள் நீரோடைகள் மற்றும் வன எல்லைகளுக்கு நீர் மற்றும் உணவு தேடி வரத் துவங்கி உள்ளது.
இந்நிலையில் தமிழக - கேரளா எல்லையான வாளையாறு அருகே அமைந்துள்ள கொடாம்மேடு, சின்னாம்பதி மலை கிராமத்திற்கு செல்லும் வழி சாலையில் சுமார் 13 அடி நீளமுள்ள ராஜநாகம் செல்வதை அப்பகுதி விவசாயிகள் பார்த்துள்ளனர்.
இது தொடர்பாக உடனடியாக மதுக்கரை வனத்துறை மற்றும் பாம்பு பிடி வீரர்களுக்கு தகவல் அளித்துள்ளனர்.
விரைந்து வந்த பாம்பு பிடி வீரர்கள் விஜேஷ் மற்றும் ராஜேஷ் சாலை ஓரத்தில் இருந்த 13 அடி ராஜநாகத்தை போராடி பத்திரமாக மீட்டனர்.
இதையடுத்து பிடிபட்ட ராஜநாகத்தை வாளையாறு அடர் வனப்பகுதியில் விடுவித்தனர். மிகவும் அடர்வனப்பகுதியில் வாழ்விடத்தை கொண்டுள்ள அதிக விஷத் தன்மையுடைய ராஜநாகம் விவசாய தோட்டத்தின் அருகே கண்டறியப்பட்டது விவசாயிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆண்டுக்கு ஒரு முறை ஏதாவது ஒரு பகுதியில் மட்டுமே ராஜநாகம் வெளியே வந்து பிடிக்கப்பட்டு அடர் வனப்பகுதியில் விடுவிக்கப்படுவதாக பாம்பு பிடி வீரர்கள் தெரிவிக்கின்றனர்.