கோவை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் நேற்று இரவு கோவிந்தராஜ் என்பவரது தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை அங்கிருந்த தண்ணிர் தொட்டியில் தண்ணீர் குடித்துவிட்டுச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
கோவை: கோவை ஆனைகட்டிமலைப்பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளன. இவைகள் உணவு தேடி அவ்வப்போது மலை அடிவாரப் பகுதிகளான மாங்கரை, தடாகம், பன்னிமடை, வரப்பாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் மற்றும் தோட்டப்பகுதிகளுக்கு வந்து செல்கின்றன.
இந்த நிலையில் நேற்று இரவு பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் ஒற்றை காட்டு யானை நுழைந்தது. அந்த யானை கோவிந்தராஜ் என்பவரது தோட்டத்திற்குள் புகுந்து அங்கிருந்த தண்ணீர் தொட்டியில் இருந்த தண்ணீரைக் குடித்துவிட்டுச் சென்றது.
இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து அங்கு வந்த வனத்துறையினர் யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.
கோடைகாலம் என்பதால் யானைகள் அடிக்கடி விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளுக்குள் தண்ணீர் தேடி வருவது அதிகரித்திருப்பதாகவும், இதனைத் தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.