கோவை துடியலூர் அடுத்துள்ள ராக்கிபாளையம் பிரிவு சிஆர்பிஎப் பயிற்சி கல்லூரியில் 14-வது பேட்ச் டி.எஸ்.பி (கெஜடட் ஆபிசர்ஸ் - உதவி கமாண்டண்ட்) மற்றும் 16-வது பேட்ச் சப்-இன்ஸ்பெக்டர்கள் (சப்-ஆர்டினெட் ஆபிசர்ஸ்) 89-வது பேட்ச் நேரடியாக பயிற்சி பெற்ற சப்-இன்ஸ்பெக்டர்கள் (சப்-ஆர்டினெட் ஆபிசர்ஸ்) பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது.

இந்த விழாவில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து கலந்துகொண்டு ராஜஸ்தான் சிஆர்பிஎப் பயிற்சி கல்லூரியில் பயிற்சி பெற்ற 22 டி.எஸ்.பி-க்கள் மற்றும் கோவை சிஆர்பிஎப் பயிற்சி கல்லூரியில் பயிற்சி பெற்ற 16-வது பேட்சில் 2 பெண்கள் உட்பட 55 சப்-இன்ஸ்பெக்டர்கள், 89-வது பேட்சில் 13 பெண்கள் உட்பட 110 சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆகியோர் பயிற்சியில் தேர்ச்சி பெற்று அவர்கள் நேரடியாக அதிகாரிகளாக நியமிக்கப்பட்டனர்.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக புதுடெல்லியில் இருந்து இந்தியாவில் உள்ள அனைத்து சிஆர்பிஎப் பயிற்சி கல்லூரியின் உதவி தலைவர் ஏ.டி.ஜி. அபாய் ஐ.பி.எஸ் கலந்து கொண்டு பயிற்சி முடித்த வீரர்கள் 15 பெண்கள் உட்பட 187 பேர்களுக்கு உதவி கமாண்டண்ட், சப்-ஆர்டினெட் ஆபிசர் பேட்சு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

மேலும் ரேங்க் அடிப்படையில் சிறந்த ஆல் ரவுண்ட் பெஸ்ட்டாக வந்த வினை பால், சிறந்த அவுட் டோர் ரகேஷ் சிங், சிறந்த வீரராக ஹரிஜிந்தர் சிங் மற்றும் எஸ்.ஐ பிரிவில் சிறந்த விளங்கிய 11 வீரர்களுக்கு கோப்பைகளை வழங்கினார்.

கடந்த 30 வாரங்களாக அனுபவம் வாய்ந்த பயிற்சி ஆசிரியர்கள் மூலம் ஒழுங்கு முறை உடைய அறிவு, திறமை மற்றும் அணுகுமுறை போன்ற மேம்பட்ட பயிற்சிகளை வீரர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்தியாவினை அச்சுறுத்தும் உலக பயங்கரவாதம் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு முறைகள் பற்றிய விழிப்புணர்வு பாடத்திட்டங்கள், அவற்றை எப்படி சாதூர்யமாக கையாளுவது போன்ற பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளது. காடுகளில் எப்படி இருக்க வேண்டும், என்ன விதமான முன்னெச்சரிக்கையுடன் செயல்படவேண்டும் போன்ற பயிற்சிகளும் வழங்கப்பட்டது.

மேலும் நம்முடைய உரிமைகள், கல்வி, சமூக விழிப்புணர்வுகள், மத சம்பந்தமான காரணங்கள், பாலினம் தெளிவுகள், மொழியியல் பின்னணி என்று மிகவும் உணர்திறன் மிக்க வலுவான வீரர்களை இந்தியா நாட்டிற்கு அர்பணிக்க இந்த பயிற்சிகள் உதவியுள்ளது.
இங்கு பயின்ற வீரர்கள் குண்டுவீச்சு, அணுக்கதிர் வீச்சு, வேதியல் விழைவுகள் மற்றும் இயற்கை செயற்கை அழிவுகளில் கதிர் வீச்சால் உண்டாகும் பாதிப்புகளை கட்டுப்படுத்துவதற்கான பயிற்சிகளை முறையாக எடுத்துள்ளனர். பின்னர் வீரர்களின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இதில் கராத்தே வீரர்களின் தீ ஓடு உடைத்தல், கல் உடைத்தல், பைக் சாகசம், எப்படி ஆபத்தில் இருப்பவர்களை பாதுகாப்பாக காப்பாற்றுவது போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் கோவை சிஆர்பிஎப் பயிற்சி கல்லூரி முதல்வர் மற்றும் டி.ஐ.ஜி சுனில்குமார் ராய், கமெண்டண்ட் சஞ்ஜீவ் குமார், அதிகாரிகள், வீரர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து ஏ.டி.ஜி. அபாய் ஐ.பி.எஸ் நிருபர்களிடம் பேசும்போது, நவீன துப்பாக்கிகளை கையாளுதல், நாட்டு வெடி குண்டு உட்பட பல்வேறு வெடிகுண்டுகளை செயல் இழக்க வைத்தல், சூழ்நிலைக்கு ஏற்றவாரே முடிவெடுத்து செயல்படுதல் போன்ற பயிற்சிகள் வீரர்களுக்கு தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது.

சிஆர்பிஎப்-ல் தேவைக்கு ஏற்ப 21 ஆயிரம் புதிய வீரர்கள் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. மாவோயிஸ்டுகளின் எண்ணிக்கைகள் கண்காணிக்கப்பட்டு வருவதால் அவர்களால் ஏற்படும் உயிர் இழப்புகள் குறைந்து வருகிறது. சிஆர்பிஎப்-ல் புதியதாக உளவு துறை ஏற்படுத்தப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாவோயிஸ்டுகளை கட்டுபடுத்த அந்தந்த மாநில அரசுகள் கேட்டுக்கொண்டால் சிஆர்பிஎப் உதவி செய்யும். சிஆர்பிஎப் வீரர்கள் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் எல்லை பாதுகாப்பு பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். பயிற்சியின் போது வீரர்களுக்கு மலேரியா போன்ற தொற்று நோய்கள் ஏற்படும்போது வீரர்களுக்கு அதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தி தொடர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன" இவ்வாறு அவர் கூறினார்.