கோவை கரும்பு இனப்பெருக்கு நிறுவனம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துடன் இணைந்து தலமலை மற்றும் இராமரணை கிராமங்களில் பழங்குடியினர் ஊட்டச்சத்து விழிப்புணர்வு முகாம் நடத்தியது. இதில், சிறுதானியங்கள் பயிரிட்டு அவற்றை அன்றாட உணவில் சேர்ப்பதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
கோவை: தலமலை அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளி மாணவர்களிடையே உரையாற்றிய கரும்பு இனப்பெருக்கு நிறுவன இயக்குநர் முனைவர் ஜி.ஹேமபிரபா, மார்ச்.21 அன்று கொண்டாடப்படும் உலக வன தினத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
அப்போது, பழங்குடியின மாணவர்கள், குடிமுறை அரசுப் பணியாளர்களாகவும், விஞ்ஞானிகளாகவும், கொள்கை வகுப்பாளர்களாகவும் உருவாகி காடுகளின் பாதுகாப்பில் உதவ வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம், கரும்பு வளர்ப்பு நிறுவனம் போன்ற வேளாண் ஆராய்ச்சி நிறுவனங்கள், நாட்டு மக்களிடையே ஏற்படுத்திய தாக்கத்தைப் பட்டியலிட்ட அவர், கல்வி மட்டுமே பழங்குடியினரின் பொருளாதார வளர்ச்சிக்கும் செழுமைக்கும் வழிவகுக்கும் என்றார்.
முன்னதாக, முதன்மை விஞ்ஞானியும், திட்ட ஒருங்கிணைப்பாளருமாகிய முனைவர் து. புத்திர பிரதாப், பள்ளிக்குழந்தைகளுடன் உரையாடியபோது, சர்வதேச சிறுதானிய ஆண்டின் முக்கிய நோக்கங்களான, சிறுதானிய உற்பத்தி மற்றும் சிறுதானிய நுகர்வு அதிகரிப்பு குறித்து விளக்கம் அளித்து, அந்த நோக்கங்களை அடைவதில் பழங்குடியின குழந்தைகள் எவ்வாறு பங்கு வகிக்க முடியும் என விவரித்தார்.
தமிழ்நாட்டின் பழங்குடியினர் பள்ளிகளில் மாணவர்களில் இடைநிற்றல் விகிதம் அதிகமாக இருப்பதாக தெரிவித்த அவர், பழங்குடியினரின் கல்வியறிவு சதவீதத்தை, தற்போதுள்ள 54 சதவீதத்திலிருந்து கணிசமாக மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார், தொடர்ந்து, மாணவர்களுக்கு எழுதுபொருட்கள், சூரிய சக்தியில் இயங்கும் டார்ச்லைட்கள், சிறுதானிய பிஸ்கட்டுகள், ஜமுக்காளம் ஆகியவற்றை இயக்குனர் வழங்கினார். பள்ளித் தலைமையாசிரியை எஸ்.பூங்கோதை பேசுகையில், மாணவர்கள் இந்த முகாமினால் பெரிதும் பயனடைந்துள்ளதாக நன்றி தெரிவித்தார்.
பின்னர், இராமரணை பழங்குடியினர் குடியிருப்பில் நடைபெற்ற முகாமில் கரும்பு இனப்பெருக்கு நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் ஜி.ஹேமபிரபா, ரேடியோ பெட்டிகள், திரவ வெல்லம் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள், பண்ணைக் கருவிகள், மாவரைக்கும் இயந்திரம், கேழ்வரகு, தினை மற்றும் சாமை விதைகள், ஒன்பது வகையான காய்கறி விதைகள் என்று 35-க்கும் மேற்பட்ட பொருட்கள் வழங்கப்படுவதாக தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, திரவ உயிர் உரம் மூலம் சிறுதானிய விதைகளை நேர்த்தி செய்வது குறித்த செயல்விளக்கம் நடத்தப்பட்டது. பின்னர், சிறப்புரையாற்றிய முதன்மை விஞ்ஞானி முனைவர் து புத்திர பிரதாப், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திலுள்ள பழங்குடியின கிராமங்களில் தொடர் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு, பழங்குடியினர், ஊட்டச்சத்து வீட்டுத்தோட்டங்கள் அமைக்கவும், மேம்படுத்தப்பட்ட இரகங்களைக் கொண்டு சிறுதானிய சாகுபடி செய்யவும் ஊக்கம் அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பழங்குடியின மக்கள் அனைவரும் ‘ஊட்டச்சத்துக் குறைபாட்டிற்கு எதிரான உறுதிமொழியினை’ எடுத்துக் கொண்டனர். இம்முகாமில், கரும்பு இனப்பெருக்கு நிறுவனத்தின் விஞ்ஞானிகளான, முனைவர் கே.மோகன்ராஜ், முனைவர் பி.கீதா மற்றும் முனைவர் வி. ஸ்ரீனிவாசா, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முனைவர் த. பாலச்சந்தர் மற்றும் தமிழக வனத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள், பழங்குடியின கிராமத் தலைவர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.