கூஜா, ஜாடி, உருண்டை வடிவம், பழைய செம்பு பானை வடிவம், குழாய் பொருத்தியது உள்ளிட்ட மண்பானைகள், 10 லிட்டர் முதல் 30 லிட்டர் கொள்ளளவில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. வடிவம் மற்றும் கொள்ளளவு அடிப்படையில் 250 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை விற்பதாக உடுமலை மண்பானை வியாபாரிகள் தெரிவித்தனர்.
திருப்பூர்: தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், பிற்பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்துவருகிறது. இதனால் வீடுகளில் இருப்பவர்கள், வாகன ஓட்டிகள் என பலதரப்பட்ட மக்களும் வெப்பத்தின் தாக்கத்தால் அவதிக்குள்ளாகிவருகின்றனர்.
உடல் சூட்டை சீராக்கும் வகையில், இளநீர், பழச்சாறு உள்ளிட்டவைகளை மக்கள் நாடத் தொடங்கியுள்ளனர். அந்த வகையில், குளிர்ந்த தண்ணீரை குடிப்பதற்காக, உடுமலைப் பகுதி மக்கள், மண்பானைகள் அதிகம் வாங்கத் தொடங்கியுள்ளனர்.
இதையொட்டி, உடுமலையில் தண்ணீர் பானைகள் கூஜா, ஜாடி, உருண்டை வடிவம், பழைய செம்பு பானை வடிவம், குழாய் பொருத்திய மண்பானை என பல்வேறு வடிவங்களில் மண்ணால் ஆன பாத்திரங்கள் விற்பனைக்கு வந்துள்ளன.
10 லிட்டர் முதல் 30 லிட்டர் கொள்ளளவு கொண்ட பானைகள் வடிவம் மற்றும் கொள்ளளவு அடிப்படையில் 250 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
இது குறித்து மண்பானை விற்பனையாளர் ஒருவர் கூறுகையில், வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் வீடு, அலுவலகம், நிறுவனங்களுக்கு என பொதுமக்கள் மண்பானைகள் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். தினமும் 100 பானைகள் விற்பனையாகிறது, என்றார்.