கோவை ஈஷா யோக மையத்தில் அமைக்கப்பட்டுள்ள 112 அடி உயரத்திலான ஆதியோகி சிலை திறப்பு விழா மற்றும் மஹா சிவராத்திரியை முன்னிட்டு அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி வருகிற 24ம் தேதி கோவை வர உள்ளார். இதனை முன்னிட்டு ஈஷா யோக மையத்தில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு அதற்கான ஒத்திகையும் நடைபெற்றது.
கோவை ஈஷா யோக மையத்தில் உலகிலேயே மிக உயரமான சுமார் 112 அடியில் ஆதியோகியான சிவபெருமானின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழாவானது வருகிற 24ம் தேதி மகா சிவாராத்திரியன்று நடைபெற உள்ள நிலையில் அதில் பங்கேற்று சிலையை திறந்து வைக்க பிரதமர் நரேந்திர மோடி கோவை வர உள்ளார். அவருடன் பல்வேறு மாநில முதல்வர்கள் மற்றும் மத்திய அமைச்சர்களும் அன்றைய தினம் ஈஷா மையத்தில் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்க உள்ளனர்.
இதனையடுத்து ஈஷா யோக மையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சி என்பதால் மத்திய சிறப்பு பாதுகாப்பு குழுவினர் ஈஷா மையம் முழுவதும் பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தி உச்சகட்ட பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழக மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பாரி,கோவை சரக காவல்துறை துணை தலைவர் மற்றும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரம்ய பாரதி உள்ளிட்டோர் ஈஷா யோக மையம் மற்றும் மஹா சிவராத்திரி நிகழ்ச்சி நடைபெறும் மைதானம்,வாகன நிறுத்துமிடங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.
அதேபோல் இந்திய விமானப்படை வீர்ர்கள் உதவியுடன் நிகழ்ச்சி நடைபெறும் பகுதிக்கு அருகிலேயே ஹெலிகாப்டர் இறங்கு தளம் அமைக்கப்பட்டு, விமானப்படை அதிகாரிகள், தேசிய சிறப்பு பாதுகாப்பு குழு அதிகாரிகள், பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் உள்ளிட்டோர் பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன் பிரதமர் பயணம் செய்ய உள்ள விமானப்படை ஹெலிகாப்டர் தரையிறங்கும் ஒத்திகையும் நடத்தப்பட்டது.