கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தை அடுத்த ராவுத்துக்கொள்ளனூர் பகுதியில் மின் கம்பத்தில் மோதிய ஆண் காட்டுயானை ஒன்று மின்சாரம் பாய்ந்து பலியானது. கால்நடை மருத்துவர்களை வரவழைத்து உடற்கூறாய்வு மேற்கொள்ள உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கோவை: கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தை அடுத்து ராவுத்துக்கொள்ளனூர் பகுதியில் இன்று அதிகாலை ஆண் காட்டு யானை ஒன்று மின்சாரம் தாக்கி இறந்து கிடப்பதாக பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த உதவி வனப்பாதுகாவலர் செந்தில் தலைமையிலான பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினர் இறந்து கிடந்த யானையை பரிசோதித்தனர்.
அதில், இன்று காலை சுமார் 7 மணி அளவில் உணவு தேடி வந்த ஆண் காட்டு யானை ஒன்று அவ்வழியாக சென்றபோது மின் கம்பத்தில் மோதி உள்ளது.
அப்போது மின்கம்பம் உடைந்து யானை மீது விழுந்ததில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே யானை பரிதாபமாக பலியானது தெரியவந்தது.
இதையடுத்து, கால்நடை மருத்துவர்களை வரவழைத்து உடற்கூறாய்வு மேற்கொள்ள உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மின்சாரம் தாக்கி காட்டு யானை பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.