கோவையில் ஹரியானாவிற்கு பஞ்சு ஏற்றி கிளம்பிய கண்டெய்னர் லாரியில் தீவிபத்து ஏற்பட்டதால் 12 டன் எடையுள்ள பஞ்சு முற்றிலும் எரிந்து நாசமானது.
கோவை தண்ணீர் பந்தல் பகுதியில் செயல்பட்டு வரும் விக்னேஷ் டிரேடர்ஸ் என்ற பஞ்சு நிறுவனத்திற்கு சொந்தமான பஞ்சு குடோன் செயல்பட்டு வருகிறது.

குடோனில் இருந்து 12 டன்கள் பஞ்சு ஏற்றிய கண்டெய்னர் லாரி ஒன்று இன்று மதியம் 3 மணியளவில் குடோனில் இருந்து கிளம்பி அருகில் உள்ள எடை மேடைக்கு சென்ற போது லாரியின் கண்டெய்னர் பகுதியில் புகை வருவதை அங்கிருந்தவர்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து உடனடியாக எடைமேடையில் இருந்து
லாரியை வெளியேற்றிய ஓட்டுனர் அதிலிருந்து கீழிறங்கி தப்பினார்.

அருகில் இருந்தவர்கள் அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த தீயணைப்பு துறையினர் 2 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 3 தண்ணீர் லாரிகள் உதவியுடன் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் ஜே.சி.பி இயந்திரம் மூலம் லாரியை பிரிக்கும் பணியிலும் ஈடுபட்டனர். இதையடுத்து சுமார் 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த விபத்தில் 12 டன் எடையுள்ள பஞ்சு முற்றிலும் எரிந்து நாசமானது. இந்த தீவிபத்து குறித்து பீளமேடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பஞ்சு லாரியில் ஏற்பட்ட தீவிபத்து காரணமாக அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.