கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப் பகுதியில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள ஈஷா யோகா மையத்தில் ஆதியோகி சில திறப்பு விழாவிற்காக பிரதமர் மோடி நாளை கோவை வரவுள்ளார்.
இதனை முன்னிட்டு, மாநகர காவல்துறையின் சார்பில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவை மாநகர காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-
நாளை (பிப். 24) விமான நிலையத்தில் இருந்து வரும் முக்கிய பிரமுகர்கள் அங்கிருந்து அவினாசி சாலை வழியாக சுங்கம் பைபாஸ் சாலை, செல்வபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி வழியாக வந்து பேரூர் சாலை வழியாக வெள்ளியங்கிரி மலை அடிவாரப் பகுதியில் ஈஷா மையத்திற்கு செல்கின்றனர்.
இதனால், சுங்கம் பைபாஸ், பேரூர் பைபாஸ் மற்றும் செல்வபுரம்- பேரூர் சாலை ஆகிய சாலையில் பயனிக்கும் வாகன ஓட்டிகள் வாகன நெரிசலைத் தவிர்க்க மாற்றுச் சாலையினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
மேலும், முக்கிய பிரமுகர்கள் வரும் போது உக்கடம் லின்க் ரோட்டில் இருந்து பேரூர் பைபாஸ் சாலை வழியாக செல்வபுரம் சிவாலயா சந்திப்பில் இருந்து தெலுங்குபாளையம் பிரிவு வரை சாலை ஓரங்களில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தக் கூடாது.
மேலும், கனரக வாகனங்கள் மேற்குறிப்பிட்ட சாலைகளில் நாளை காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை பயன்படுத்தாமல் எல்என்டி, போத்தனூர் பைபாஸ் சாலையை பயன்படுத்த வேண்டும்.
தற்காலிகமாக செயல்படுத்தப்பட்டுள்ள இந்த போக்குவரத்து மாற்றத்திற்கு பொதுமக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.