பிரதமர் மோடி இன்று கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஈஷா யோகா மையத்திற்கு வருவதையொட்டி கோவையில் 5 ஆயிரம் கூடுதல் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக மலைப்பகுதிகளை ஒட்டியுள்ள இடங்களில் நக்சலைட் ஊடுருவலைத் தடுக்க மிக தீவிரமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பிரதமர் மோடி இன்று மாலை சூலூர் விமான நிலையத் தளத்திற்கு விமானத்தின் மூலம் வந்திறங்குவார். பின்பு அங்கிருந்து ஈஷா யோகா மையத்திற்கு எலிகாப்டர் மூலம் சென்றடைவார். மேலும், இந்நிகழ்ச்சியில் பாஜக தலைவர்கள், அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர்.
போக்குவரத்து மாற்றம்
கோவைக்கு மோடி வருவதையொட்டி கோவை மாநகர காவல் துறையின் சார்பில் கீழ்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
சுங்கம் பைபாஸ், பேரூர் பைபாஸ் மற்றும் செல்வபுரம்- பேரூர் சாலை ஆகிய சாலையில் பயனிக்கும் வாகன ஓட்டிகள் வாகன நெரிசலைத் தவிர்க்க மாற்றுச் சாலையினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
மேலும், முக்கிய பிரமுகர்கள் வரும் போது உக்கடம் லின்க் ரோட்டில் இருந்து பேரூர் பைபாஸ் சாலை வழியாக செல்வபுரம் சிவாலயா சந்திப்பில் இருந்து தெலுங்குபாளையம் பிரிவு வரை சாலை ஓரங்களில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தக் கூடாது.
மேலும், கனரக வாகனங்கள் மேற்குறிப்பிட்ட சாலைகளில் இன்று காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை பயன்படுத்தாமல் எல்என்டி, போத்தனூர் பைபாஸ் சாலையை பயன்படுத்த வேண்டும்.
ஈஷா மீது எழுப்பப்படும் குற்றச்சாட்டுகள்
பிரதமர் மோடியின் ஈஷா யோகா மைய வருகைக்கு எதிராக பல்வேறு பகுதிகளில் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. பல்வேறு அரசியல் அமைப்புகள், வர்த்தக அமைப்புகள், சூழல் அமைப்புகள் ஆகியன ஈஷா மையத்தின் மீது உள்ள புகார்களின் காரணமாக பிரதமர் ஈஷா வருகையை ரத்து செய்யுமாறு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
நில ஆக்கிரமிப்பு, சட்டத்திற்கு புரம்பாக 13 லட்சம் சதுரடியில் கட்டிடம் கட்டியது, சதுப்பு நிலங்களை கட்டிடங்களாக மாற்றியது, வனப்பகுதிகளையும், பசுமையையும் சீரழித்தது, அப்பகுதியில் பல்லுயிர் தன்மையை மாற்றியது, யானை வலசைப்பாதைகளை தடுத்து அவற்றின் நடமாட்டத்திற்கு இடையூராக இருப்பது ஆகிய குற்றச்சாட்டுகள் ஈஷா மையத்தின் மீது எழுப்பப்பட்டுள்ளது.
இதில் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு வலுவான ஆதாரங்களும் உள்ளது. 2012 ஆம் ஆண்டு பணி நிறுத்த ஆணையும், கட்டிடங்களை இடப்பதற்கான ஆணையும் ஈஷாவிற்கு வழங்கப்பட்டது. ஆனால் அதுகுறித்து எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.
மாவட்ட வன அதிகாரி, கிராமப்புர மற்றும் நகரமைப்புத் துறை ஆகியன உயர்நீதி மன்றத்தில் வனப்பகுதிகளை சட்டத்திற்கு புரம்பான கட்டிடங்களாக மாற்றியதாக ஒப்புக்கொண்டுள்ளன என்று சென்னை உயர்நீதி மன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன் புதனன்று செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், பிரதமரின் ஈஷா வருகை அலுவலர்களின் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக இருக்கும். வெள்ளியங்கிரி மலை ஆதிவாசிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் ஈஷாவில் உள்ள சட்டத்திற்கு புரம்பாக உள்ள கட்டிடங்களை இடிப்பதற்காக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது" என்றார்.
இதனிடையே, சிபிஎம், தந்தை பெரியார் திராவிட கழகம், சமூக நீதிக்கட்சி ஆகிய அமைப்புகள் பிரதமரின் ஈஷா வருகைக்கு எதிராக போராடி வருகின்றனர். மேலும், அவர்கள் கருப்பு கொடி ஏந்தி பிரதமர் மோடியின் வருகைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அறிவித்துள்ளார்கள். ஆதலால் பாதுகாப்பு மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.