கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளை கையாள்வதற்கான ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை மாவட்டத்தில் தற்போது 113 பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருவதாக மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தெரிவித்தார்.
கோவை: கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோய் தொற்று முன்னேற்பாடுகள் மற்றும் நோயாளிகளை கையாளுதல் தொடர்பான ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி நேரில் பார்வையிட்டார். இதில் கோவை அரசு மருத்துவமனை முதல்வர் நிர்மலா, மாவட்ட சுகாதார இணை இயக்குநர் அருணா ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் ஆட்சியர் கிராந்திகுமார் பாடி பேசியதாவது:
கொரோனா நோயாளிகள் வரும்போது மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் நோயாளிகளை கையாளுவது குறித்த ஒத்திகை நடைபெற்றது.
இந்த ஒத்திகை அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இதனை அதிகாரிகள் பார்வையிட உள்ளனர்.
நேற்று கோவை அரசு மருத்துவமனையில் புதிதாக கொரோனா நோயாளிகள் வரவில்லை.
தனியார் மருத்துவனைகளில் 13 பேர் கொரோனா பாதிப்புடன் நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளனர்.கோவை மாவட்டத்தில் தற்போது 113 பேர் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர்.கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் உள்ள ஆக்சிஜன் பிளாண்ட் தயார் நிலையில் உள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான வசதிகள் தயார் நிலையில் உள்ளது.கொரோனா தொற்று பாதிப்புகள் தீவிரமான நிலையில் பெரிய பாதிப்புகள் வரவில்லை.
எந்த மருத்துவமனைக்கு சென்றாலும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலனோர் கொரோனா தடுப்பூசிகளை செலுத்தி உள்ளனர். பூஸ்டர் தடுப்பூசி என்பது கூடுதலாக எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி மருத்துவமனைகளில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அரசு அறிவுரை வழங்கினால் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படும். கொரோனா பாதிப்புக்கு உள்ளாகும் இணை நோய் உள்ளவர்களுக்கு ரிஸ்க் அதிகம். அவர்கள் கட்டாயம் இல்லையென்றாலும் முகக்கவசம் அணிய வேண்டும். தனி மனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
கொரோனா பரிசோதனை ரேண்டமாக நடத்தப்படுகிறது. தொற்று பாதிப்பு அறிகுறி உள்ளவர்களுக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 300 முதல் 400 கொரோனா பரிசோதனைகள் நடத்தப்படுகிறது.
இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 16 ஆக்சிஜன் பிளாண்ட் உள்ளது. ஆக்சிஜனை இருப்பு வைக்க முடியாது. ஆக்சிஜன் பிளண்ட் தயார் நிலையில் உள்ளது.எந்த வகையிலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு கிடையாது.
இவ்வாறு ஆட்சியர் கூறினார்.