கோவையில் கடந்த சில வாரங்களாக பன்றிக்காய்ச்சல் பரவிவருகிறது. மேலும், ஈரோடு, திருப்பூர் மற்றும் நீலகிரி பகுதியில் மர்மகாய்ச்சல் மற்றும் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் கோவை அரசு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் கோவை சிகிச்சை பெற வந்தோர்களில் இதுவரை 36 பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருப்பதாக கோவை அரசு மருத்துவமனையின் இருப்பிட மருத்துவ சவுந்திர் வேலி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
கோவை மட்டுமின்றி திருப்பூர் ,ஈரோடு ,நீலகிரி மாவட்டங்களை சேர்ந்த பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தவிர தனியார் மருத்துவமனைகளிலும் ஏராளமானவர்கள் சிகிச்சை பெற்றுவருகின்றனர். மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிலரும் தங்களுக்கு பன்றிக்காய்ச்சல் தொற்று இருக்கலாம் என்ற பீதியில் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கடந்த 3 மாதங்களில் மட்டும் 200க்கும் மேற்பட்டோர் பன்றி காய்ச்சல் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்றுள்ளனர். மேலும், கோவை அரசு மருத்துவமனையில் பன்றிக்காய்ச்சல் அறிகுறிகளுடன் 36 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 8 பேருக்கு பன்றி காய்ச்சல் இருபது உறுதி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 28 பேரில் இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பியுள்ளோம். அறிகுறிகள் இருந்தாலே அவர்களுக்கு சிகிச்சை அளிக்கபடுகிறது.
மேலும், அவர்களுக்கு தனி அறையில் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறோம். தற்போது டெங்கு காய்ச்சலுக்கு பாதிக்கப்ப்ட்டு 3 பேர் சிகிச்சைக்கை பெற்று வருகின்றனர். சாதாரண காய்ச்சலாக இருந்தாலும் உடனடியாக மக்கள் அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற வேண்டும். முறையான சிகிச்சை பெறாமல் கடைசி நேரத்தில் அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர். உடனடி சிகிச்சை பெறாவிட்டால் உயிரிழப்பு நேரலாம். பன்றிக்காய்ச்சல் சிகிச்சைக்கு தேவையான போதிய அளவிலான மருந்து அரசு மருத்துவமனையில் உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.