அத்திக்கடவு- அவிநாசி திட்டத்திற்கு மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் விரைந்து செயல்படுத்தப்படும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கோவை அரசு விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மக்களுக்காக செயல்படுத்த நினைத்த திட்டங்களை எஞ்சிய நான்கு ஆண்டுகளில் அதிமுக அரசு நிறைவேற்றுமென தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் ரகசிய வாக்கெடுப்பு எடுப்பது தொடர்பாக வழக்கு நடந்து கொண்டிருக்கும் சூழலில் எந்த கருத்தும் சொல்ல முடியாது என தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம் என்பது மத்திய அரசின் திட்டம் எனவும், இதில் விவசாயிகள் நலனில் தமிழக அரசு அக்கறையுடன் செயல்படுமெனவும் அவர் தெரிவித்தார்.
அத்திக்கடவு- அவிநாசி திட்டத்திற்கு மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் விரைந்து செயல்படுத்தப்படும் எனவும், இத்திட்டத்தின் மூலம் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் குடிநீர் மற்றும் நிலத்தடி நீர் மேம்படுத்தப்படுமெனவும் முதலமைச்சர் தெரிவித்தார்.
பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்டுவதை சட்ட ரீதியாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், வறட்சியினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 5 நாட்களுக்குள் நிவாரணம் கிடைக்குமெனவும் அவர் தெரிவித்தார்.
நீட் தேர்வு தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு குடியரசு தலைவர் ஒப்பதல் கிடைக்குமென எதிர்பார்ப்பதாகவும், நீட் தேர்வை ரத்து செய்வது தொடர்பாக வருகின்ற 27-ம் தேதி பிரதமரை சந்தித்து கோரிக்கை வைக்கப்படுமெனவும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
மேற்கு புறவழிச்சாலை, மோனோ ரயில்திட்டம், ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், பல்வேறு மேம்பாலப்பணிகள் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், மத்திய அரசுடன் மாநில அரசு சுமூக உறவு கொண்டு இணைந்து செயல்படுமெனவும் கூறிய அவர், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிலர் தவறாக புரளி கிளப்பி வருவதாகவும், அதில் எந்த பிரச்சனையும் கிடையாது எனவும் அவர் தெரிவித்தார்.