பல்லடம் அடுத்த ஆறுமுத்தாம்பாளையம் அருகேயுள்ள சாய் குரு கார்டன் பகுதியில் குப்பைகளை கொட்ட வந்த லாரி மற்றும் டிராக்டரை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள், பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வந்த ஊராட்சி செயலாளரையும் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர்: பல்லடம் அருகே சட்டவிரோதமாக குப்பைகளை கொட்ட வந்த லாரி மற்றும் டிராக்டரை பொதுமக்கள் சிறைபிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கரைப்புதூர் ஊராட்சி மற்றும் ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சிக்கு இடையில் அமைந்துள்ளது சாய் குரு கார்டன். இங்கு 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
கரைப்புதூர் மற்றும் ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சியில் இருந்து கோழி கழிவுகள், ஊராட்சி குப்பைகள் அனைத்தையும் சாய் குரு கார்டனில் உள்ள ஓடையில் கடந்த 10 ஆண்டுகளாக கொட்டப்பட்டு வருகிறது.
இதனை கண்டித்து, அப்பகுதி மக்கள் பல கட்ட போராட்டங்கள் நடத்தியும், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் இதுவரை குப்பைகள் கொட்டுவதை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
நீரோடையில் குப்பை கொட்டி வைத்துள்ளதால் அந்த பகுதியில் நாய்கள் தொல்லை அதிகரித்து உள்ளதாகவும், மழைக்காலங்களில் கடுமையான துர்நாற்றம் வீசுவதாகவும், ஈக்கள் தொல்லை அதிகரித்துள்ளதாகவும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று கரைப்புதூர் ஊராட்சியில் இருந்து குப்பைகளை கொட்ட வந்த லாரி மற்றும் டிராக்டர் ஒன்றை அப்பகுதி மக்கள் சிறை பிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் ஊராட்சி செயலாளர் மற்றும் காவல் துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது, பேச்சை வார்த்தைக்கு வந்த ஊராட்சி செயலாளரை பொதுமக்கள் சிறைபிடித்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், சுத்திகரிப்பு நிலையம் அமைக்க இன்னும் இடம் தேர்வு செய்யப்படவில்லை என்றும், விரைவில் குப்பை கிடங்கு அமைத்து குப்பைகளை சுத்திகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஊராட்சி செயலாளர் மற்றும் காவல் துறையினர் உறுதி அளித்த நிலையில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
பொதுமக்களின் இந்த போராட்டம் காரணமாக அப்பகுதி சில மணி நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.