உடுமலை மாரியம்மன் கோவில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க முக்கிய வீதி வழியாக வலம் வந்து கோவிலை அடைந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
திருப்பூர்: உடுமலையில் புகழ்பெற்ற மாரியம்மன் கோவில் திருத்தேரோட்டத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள 300 ஆண்டுகள் பழமையான மாரியம்மன் கோவில் தேர்திருவிழா கடந்த மார்ச் 28ஆம் தேதி நோன்பு சாட்டுதலுடன்தொடங்கியது.
இதைத்தொடர்ந்து கம்பம் போடுதல்நிகழ்ச்சி, தினமும் முக்கிய விதியில் அம்மன் திருவீதி உலா, திருக்கல்யாணம், மாவிளக்கு, பூவோடு எடுத்தல் உடம்பில் கத்தி போட்டு நூதன வழிபாடு உள்ளிட்ட பல்வேறு சிறப்பு நிகழ்வுகள் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெற்றது.
ஒன்பதுநிலைகளுடன் கூடிய திருத்தேர் அலங்கரிக்கப்பட்ட தேரானது மாரியம்மன் கோவில் பகுதியிலிருந்து மதுரையில் வந்த யானையின் உதவியோடு, பொதுமக்களால் வடம் பிடித்து இழுத்த தேர் பழனி சாலை, தளிரோடு, குட்டை திடல், தலைகொண்ட அம்மன் கோவில் வீதி, கொல்லம் பட்டறை வழியாக மாரியம்மன் கோவிலைஅடைந்தது.
தேரோட்டத்தை முன்னிட்டு உடுமலை- பழனி, பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.
தேர் திருவிழாவை முன்னிட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சாசாங் சாய்தலைமையில் 500-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில் உடுமலை மாரியம்மன் கோவில் தேர்திருவிழாவில் பூர்வீக பள்ளி வாசல் சார்ந்த இஸ்லாமியர்கள் பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.