கோவை மாநகரில் தெற்கு சட்டமன்ற பகுதிக்குட்ப்பட்ட 71வது வார்டில் கே.எஸ்.எஸ் நகர் என்னும் 'கல்லுக்குழி சுபாஸ் சந்திரபோஸ்' நகர் குடியிருப்பு நலச்சங்கம் உள்ளது. இதன் சுற்றுவட்டாரப் பகுதியில் சுங்கம் பேருந்து நிலையம், நிர்மல மகளிர் கல்லூரி, புலியகுளம் மற்றும் கார்மல் கார்டன் பள்ளி ஆகியவை இடையின் மத்தியில் தாழ்வான பகுதியில் இருப்பதே இந்த கல்லுக்குழி. கோவை மாவட்டத்தின் இன்று பல்வேறு அடுக்கு மாடி குடியிருப்புகள், பள்ளிக் கல்லூரிகள், வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிற் நிறுவனங்கள் நிறைந்து வரும் இந்த கோயமுத்தூர் சிட்டி பகுதியின் நடுவில் இப்படி ஒரு குட்டி கிராமம் இருப்பதை நாம் அனைவரும் அறிந்திருக்க முடியாது. அப்பகுதியில் உள்ள மக்களை சந்திக்கும் போது அவர்கள் நம்மிடம் பகிர்ந்து கொண்டதை நாம் சிம்ப்ளிசிட்டி செயலி மூலம் காணலாம்.

கல்லுக்குழி பகுதி 11 ஏக்கர் நிலப்பரப்பு கொண்டது. இன்று வரை இங்கு 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இப்பகுதியில் உள்ளனர். தற்போது இங்கு வாழும் பொதுமக்கள் ஐந்தாவது தலைமுறையாக இங்கு வசித்து வருகின்றனர். முதல் தலைமுறையில் இப்பகுதி முற்காடுகள் நிறைந்த பகுதியாக இருந்த நிலையில் முற்காடுகளை அளித்து இங்கு சிலர் தஞ்சம் புகுந்தனர். அதனை தொடர்ந்து அடுத்த தலைமுறையினர் இப்பகுதியில் வசித்து வருவதாக கூறுகின்றனர். இவர்களுக்கு இங்கு வசிப்பதற்கு தேவையான நிலப்பட்டாக்கள் இல்லை என்பதால் இப்பகுதிக்கு மேற்பரப்பில் உள்ள சில நிறுவனங்கள் இப்பகுதியை சொந்தம் கொண்டாடி வருவதாக இப்பகுதிமக்கள் கூறுகின்றனர். இவர்களுக்கு மாநகராட்சி சார்பில் ரேசன் கார்டுகள், வாக்காளர் அடையாள அட்டைகள் போன்றவை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இப்பகுதி தனியார் நிறுவனங்கள் சொந்தம் கொண்டாடும் நிலையில் இப்பகுதிக்கு நிலப்பட்டா வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் இப்பகுதி பொதுமக்கள் நிலவழக்கை 6 ஆண்டு காலமாக தொடர்ந்து வருகின்றனர்.

இது போன்ற காரணங்களால் இப்பகுதியை அதிகாரிகள் யாரும் கண்டு கொள்வதில்லை. ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சி மாறினாலும், எங்களின் நிலைமை மாறுவதில்லை. இப்பகுதிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாகக் கூறிக் கொண்டு அரசியல் தலைவர்கள் பலர் இப்பகுதிகளுக்கு வாக்கு சேகரிக்க மட்டுமே வருவதாகவும் பின்னர் தேர்தல் முடிந்த நிலையில் யாரும் தங்களை கண்டு கொள்வதே இல்லை என்கின்றனர். எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாமல் இவர்கள் இங்கு வாழ்ந்து வருகின்றனர். சட்டமன்ற தேர்தலில் போது பாரத ஜனதா கட்சியின் தெற்கு தொகுதி வேட்பாளர் வானதி ஸ்ரீனிவாசன் இப்பகுதிக்கு தேவையான தண்ணீர் பிரச்சனை போக்க மேல்நிலை நீர்நிலைத் தொட்டி அமைத்து தருவதாகக் கூறிக் கொண்டு இரண்டு (சின்டெக்ஸ்) நீர்தேக்கு தொட்டியை தனது செலவில் வழங்கினார். பின்னர் தேர்தலில் தோல்வி அடைந்த நிலையில் இந்த வேலைப்பணிகள் தொடங்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல், இப்பகுதி மக்களுக்கு அடிப்படை தேவையான கழிவறை வசதிகள் இல்லாமல் இப்பகுதியில் உள்ள முற்காடுகளுக்கு சென்று வருகின்றனர். இரவு நேரங்களில் விஷப் பாம்புகள் அதிகம் இருப்பதாலும் அச்சத்தில் உள்ளனர். கோவை மாவட்ட முன்னாள் ஆட்சித் தலைவராக கருணாகரன் இருந்த போது இப்பகுதிக்கு மின்வசதிகள் இணைக்கப்பட்டது. ஆனால், சென்ற ஆண்டு தெருவிளக்குகள் பொருத்தப்பட்டும் தற்போது வரை அதற்கு மின் இணைப்பு கொடுக்கப்படாமால் உள்ளது. குறிப்பாக, பருவ மழைக் காலங்களில் எங்கள் குடியிருப்பு பகுதிகளை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து மழை நீர் புரண்டெடுத்து தாழ்வான பகுதிகளில் நாங்கள் குடியிருக்கும் பகுதிக்கு வருவதால் பலமுறை நாங்கள் மண்டபம் மற்றும் பள்ளி கூடங்களில் தங்கி வருகின்றோம். மேலும் சுற்றியுள்ள வீடு மற்றும் நிறுவனங்களில் இருந்து வெளியேற்றப்படும் குப்பை மற்றும் கழிவுப் பொருட்கள் எங்கள் பகுதியில் கொட்டப்படுகிறது.

இப்பகுதியில் பணிக்கு செல்பவர்கள், பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்கள் உள்ளனர். ஆனால், எங்கள் பகுதியில் பேருந்து நிலையம் என்ற பெயரில் போர்டு மட்டுமே உள்ளது. பேருந்து நிலையம் இல்லாததால் பேருந்துகள் இங்கு நிற்பதில்லை. அதேபோல், கடந்த சில வருடங்களுக்கு முன் இப்பகுதியை சுற்றி பல அடுக்குமாடி வீடுகள் கட்டும் போதும் நிலத்தடி போர் வேலை செய்யும் போதும் நில அதிர்வுகளால் எங்கள் பகுதியில் பாறை உருண்டு வீட்டின் மீது விழுந்ததில் 4 பேர் இறந்தனர். இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க மாநகராட்சி சார்பில் செட்டிபாளையம் பகுதியில் வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டது. விருப்பம் உள்ளவர்கள் சிலர் சென்றனர். மீதம் உள்ள அனைவரும் செட்டிபாளையம் பகுதியில் வீடுகள் இருபதனால் இங்கு பள்ளிக் கல்லூரி மாணவர்களின் படிப்பும், கூலி தொழில் செய்பவர்கள் இங்கு அதிகம் உள்ளனர் அவர்கள் பணிக்கு செல்வதற்கும் மிகுந்த சிரமம் ஏற்படும் என்ற நிலை கருதி இங்கு வசித்து வருகின்றனர். ஒரு சில தனியார் நிறுவனங்கள் 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை இப்பகுதியில் குடிருப்பவர்களுக்கு கொடுத்து இடங்களை ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ளதாக கூறுகின்றனர்.

இதற்கு, தீர்வாக இவர்கள் முறையிடுவது என்னவென்றால், தாழ்வான இந்த கல்லுக்குழி பகுதியில் மண் கொட்டப்பட்டு சுற்றியுள்ள பகுதிகளுக்கு ஏற்றவாறு மேற்பரப்பில் எங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி வீடுகள் கட்டி கொடுக்க வலியுறுத்துகின்றனர். இதற்கு 'கல்லுக்குழி சுபாஸ் சந்திரபோஸ்' நகர் குடியிருப்பு நலச்சங்கம் சார்பில் கேட்டு கொண்டுள்ளனர்.