கோவை குனியமுத்தூர் பகுதியில் அதிமுக சார்பில் அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் பந்தலை முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏ.வுமான எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், திமுக ஆட்சியில் எங்கு பார்த்தாலும் ஊழல் நிறைந்துள்ளது என்றார்.
கோவை: குனியமுத்தூர் பகுதியில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.
கோவை குனியமுத்தூர் பகுதியில் அதிமுக சார்பில் அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் பந்தலை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
சட்ட மேதை அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது புகைப்படத்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதேபோல் எடப்பாடியார் உத்தரவுக்கு இணங்க பல்வேறு இடங்களில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டுள்ளது.
திமுக ஆட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளில் எந்த வேலைகளும் நடைபெறவில்லை. அத்திக்கிடவு-அவிநாசி திட்டம், பாலங்கள், சாலைகள் போன்ற திட்டங்கள் அனைத்தும் மெதுவாக நடைபெறுகிறது.
கோவைக்கு புதியதாக எந்த திட்டமும் கொண்டு வரவில்லை. கோவை மாவட்டத்தை புறக்கணிக்காமல் திட்டங்களை செயல்படுத்த வேண்டும். திமுக ஆட்சியில் எங்கு பார்த்தாலும் ஊழல் தான் நடைபெறுகிறது. இதை நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.
கோவையில் ஒரு லோடு மண் எடுப்பதற்கு 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை லஞ்சமாக வாங்குகின்றனர். மாநகராட்சி, தாலுகா அலுவலகம் உட்பட அனைத்து அலுவலகங்களிலும் லஞ்சம் இருக்கிறது. திமுகவினர் எல்லா இடங்களிலும் கொள்ளை அடித்துக் கொண்டிருக்கின்றனர்.
சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மக்களுக்காக பல்வேறு பிரச்னைகளை கொண்டு வருகிறார். அவை எல்லாம் வெளியில் தெரிவதில்லை. திமுகவை ஊடகங்கள் தூக்கிப் பிடிக்கின்றன. ஊடகங்கள் கைவிட்டு விட்டால் திமுக விழுந்து விடும்
ஐபிஎல் போட்டிகளை பொறுத்த வரை கிரிக்கெட் போர்டில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு 300, 400 டிக்கெட் கொடுக்கப்பட்டிருப்பதாக கேள்விபட்டோம். அந்த நேரத்தில் இந்த கேள்வியை கேட்டால் சரியாக இருக்கும் என்பதால் அந்தக் கேள்வி கேட்கப்பட்டது.
அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுகாகவே கேட்கப்பட்டது. அதற்கு விளையாட்டு துறையிலிருந்து பதில் சொல்லிவிட்டார்கள். அதற்கு பின்பு சட்டமன்ற உறுப்பினர்கள் நிறைய பேருக்கு வாய்ப்பு வந்து அவர்கள் போய் போட்டி பார்த்திருக்கிறார்கள்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.