கோவை மாநகராட்சியில் மாநகராட்சியின் பல்வேறு மண்டலங்களில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகள் குறித்து, ஆய்வு மேற்கொண்ட நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா, குடிநீர் தரத்தை குடித்துப் பார்த்து ஆய்வு செய்தார்.
கோவை: கோவை மாநகராட்சியின் பல்வேறு மண்டலங்களில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா ஆய்வு மேற்கொண்டார்.
கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.32-க்கு உட்பட்ட சங்கனூர் நாராயணசாமி நகரில் 24 மணி நேர குடிநீர் திட்டத்தின் கீழ் பகிர்மான குழாய்கள் அமைத்து வீடுகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருவதை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா நேரில் சென்று பார்வையிட்டு வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரின் தரத்தை குடித்துப்பார்த்து ஆய்வு செய்தார்.
அதனைத் தொடர்ந்து, மத்திய மண்டலம் வார்டு எண்.32க்கு உட்பட்ட சங்கனூர் பகுதியிலுள்ள நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையத்தை (Micro Composting Centre) நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளா் சிவ் தாஸ் மீனா, நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, மக்கும், மக்காத குப்பைகள் எவ்வாறு தரம் பிரிக்கப்படுகிறது என்பது குறித்தும், எரிமேடை மயானம் மற்றும் மயானம் ஆகியவை செயல்பட்டுவரும் இடத்தை நேரில் பார்வையிட்டு, அங்கு அடிப்படை வசதிகளான கழிவறை, குடிநீர் வசதிகள் மற்றும் இதர தேவைகள் குறித்து கேட்டறிந்த பின்னர் அங்குள்ள தூய்மை பணியாளர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
பின்னர், மேற்கு மண்டலத்திற்குட்பட்ட லாலிரோடு சந்திப்பில் 24 மணி நேர குடிநீர் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் மேல்நிலை குடிநீர்த் தேக்கத் தொட்டியின் கட்டுமான பணியினை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதனையடுத்து பணியினை விரைவாகவும், தரமாகவும் செய்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர அறிவுறுத்தினார். மேலும், தற்போது 24 மணி நேர குடிநீர் திட்டப்பணிகளில் ஈடுபட்டு வரும் பணியாளர்களின் எண்ணிக்கை இரு மடங்காக உயர்த்தியும், திட்டத்தினை ஓப்பந்தகாலத்திற்குள் செய்து முடிக்கவும், உரிய திட்டமிட்டு பணிகளை செய்து முடிக்கவும் அறிவுறுத்தினார்.
மேலும், நெடுஞ்சாலைத்துறை, மாநகராட்சி மற்றும் இதர துறைகளில் திட்டப்பணிகள் மேற்கொள்வதற்கு தேவையான அனுமதி பெறுவதற்கு முன்னேற்பாடு பணிகளை செவ்வனே செய்ய வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.
மாநகராட்சி நிர்வாகம் 24 மணி நேர குடிநீர் திட்டப்பணிகளை விரைவாக செய்து முடிக்க தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தினார். மேலும், மேல்நிலை குடிநீர்த்தேக்க தொட்டி கட்டுமான பணியின் தரத்தை பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி பரிசோதனை செய்ய பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.
அதனை தொடர்ந்து, மத்திய மண்டலம், வார்டு எண்.83க்கு உட்பட்ட ஆடிஸ் வீதியில் சீர்மிகு நகரத்திட்டத்தின் கீழ் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கட்டும் பணியை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா நேரில் சென்று பார்வையிட்டார்.
இதனையடுத்து, பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்து விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார்.
கோயம்புத்தூர் மாநகராட்சி, மத்திய மண்டலம், வார்டு எண்.83க்கு உட்பட்ட ஆடிஸ் வீதியில் மாநகராட்சி இடத்தில் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் 7,800 சதுர அடி பரப்பளவில் அதிநவீன வசதிகளுடன் கூடிய நூலகம் மற்றும் அறிவுசார் மைய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.
இந்த நவீன நாலகம் மற்றும் அறிவுசார் மையத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் மாநில மற்றும் தேசிய அளவில் நடைபெறும் போட்டித் தேர்வுகளை தைரியமாக எதிர்கொண்டு வெற்றி பெற ஏதுவாக பயிற்சி மையத்துடன் கூடிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இம்மையத்தில் 80 நபர்கள் அமர்ந்து படிக்க ஏதுவாக நூலக அறை அலுவலக அறை, கழிப்பிடங்கள், 10,000 புத்தகங்கள் வைக்க ஏதுவாக அலமாரிகள், 42 நபர்களுக்கு பயிற்சி கொடுக்க ஏதுவாக பயிற்சி அறை, வாகன நிறுத்துமிடம், தாய்மார்கள் பாலூட்டும் அறை, சிறுவர் மற்றும் சிறுமியா்களுக்காகசெயல்திறன் அறை, செய்தித்தாள்கள் மற்றும் செய்தி இதழ்கள் வாசிப்பு அறை போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளது என்பது குறித்து கேட்டறிந்தார்.

பின்னர், கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம், கோவைப்புதூர் பகுதியில் ரூ.591.14 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் குறிச்சி, குனியமுத்தூர் பாதாள சாக்கடை திட்டம் பகுதி-1 மற்றும் 2 பணிகளை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும், எதிர்வரும் ஜீன் 30-க்குள் பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்து விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார். மீதமுள்ள கழிவு நீரேற்றம் கட்டுமானப் பணிகளை விரைவாக செய்து முடிக்க அறிவுறுத்தினார்.
பணிகள் முடிக்கப்பட்ட இடங்களில் வீட்டு இணைப்புகளை முறையாக வழங்கவும், அவ்விடங்களில் சரியான குறியீடு (Marking)குறிக்கப்பட்டு, பணிகளை செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, வார்டு எண்.100க்கு உட்பட்ட முத்துநகா் பகுதியில் கட்டப்பட்டு வரும் கழிவு நீரேற்றம் கட்டுமான பணிகளை தரமாகவும், விரைவாகவும் செய்து முடிக்க வேண்டுமெனவும், வளாக பகுதியில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கவும் அறிவுறுத்தினார்.