கோவை போத்தனூர் திருமலை நகரில் அருகே வீட்டில் வைக்கப்பட்டிருந்த பூத் தொட்டிக்குள் நாகப்பாம்பு மறைந்திருந்தது. அந்த பாம்பை பிடித்து, உக்கடம் பெரியகுளம் மேற்குகரை பகுதியில் உள்ள நொய்யல் ஆற்றை ஒட்டியுள்ள புதர் நிறைந்த பகுதியில் விடப்பட்டது.
கோவை: கோடைக்காலம் துவங்கி உள்ள நிலையில், கோவையில் பல்வேறு இடங்களில் பாம்புகள் உட்பட பல்வேறு விஷ ஜந்துக்கள் தொடர்ந்து, குளிர்ச்சியான இடம் தேடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைவது அதிகரித்துவருகிறது.
அந்த வகையில், கோவை போத்தனூர் திருமலை நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் பூத்தொட்டிக்குள் நாகபாம்பு ஒன்று இருந்துள்ளது. இதனைப்பார்த்த அவ்வீட்டார், கிரீன்கேர் அமைப்பிற்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து? அங்கு சென்ற பாம்பு பிடி வீரர் சினேக் அமீன், அந்த நாகபாம்பை லாவகமாக பிடித்தார். பிடிபட்ட அந்த பாம்பு சுமார் நான்கரை அடி நீளம் இருந்தது கண்டு வீட்டார் உட்பட அக்கம்பக்கத்தினர் அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
பின்னர், பிடிபட்ட பாம்பு, உக்கடம் பெரியகுளம் மேற்குகரை பகுதியில் உள்ள நொய்யல் ஆற்றை ஒட்டியுள்ள புதர்நிறைந்த பகுதியில் விடப்பட்டது. இப்பகுதியிலேயே கடந்த 10 நாட்களுக்கு முன்பு 2 பாம்புகள் பிடிக்கப்பட்டு வனப்பகுதிக்குள் விடப்பட்டது.
குழந்தைகள் அனைவரும் மாலை நேரங்களில் விளையாடி கொண்டிருப்பதாலும், அடுத்த வாரத்தில் பள்ளி விடுமுறை விடப்படுவதால் குழந்தைகள் அனைவரும் அதிக நேரம் அப்பகுதியில் விளையாட வாய்ப்புள்ளதாலும், குடியிருப்பு பகுதியில் உள்ள பாம்புகளை பிடிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.