நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள மசினகுடி - தெப்பக்காடு நெடுஞ்சாலையில் சென்ற வாகனங்களை காட்டு யானை ஒன்று ஆக்ரோஷமாகத் துரத்தி விரட்டியது. இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது.
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் தற்பொழுது கோடை காரணமாக கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால், வனவிலங்குகள் உணவு, தண்ணீர் தேடி இடம் பெயர தொடங்கி உள்ளன.
குறிப்பாக, முதுமலைக்குள் உள்ள பிரதான சாலைகளில் யானைகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. காலை மற்றும் மாலை நேரங்களில் சாலை ஓரத்திற்கு வரும் யானைகளை வாகன ஓட்டிகள் தொந்தரவு செய்வதால், அவை வாகனங்களை தூரத்தவும் செய்கின்றன.
இந்த நிலையில், நேற்று மாலை மசினகுடி - தெப்பக்காடு சாலையில் சென்ற வாகன ஓட்டிகள், சாலை ஓரத்தில் இருந்த ஒற்றை காட்டுயானையை சீண்டியுள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த அந்த ஒற்றை யானை ஆக்ரோஷமாக, அவ்வழியாக வந்த தாக்க ஓடிவந்தது.
இதனால் அச்சமடைந்த சுற்றுலா பயணிகள் வாகனங்களை பின்னோக்கி எடுத்துச்சென்று தப்பித்தனர். சிறிது நேரம் கழித்து, யானை மீண்டும் மூங்கில்களை உடைத்து சாப்பிட்டு அதன் பின்பு வனப்பகுதிகுள் சென்றது. அந்த காட்சி தற்போது சமூகவலை தலங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதனிடையே, சாலையோரத்திற்கு வரும் வன விலங்குகளை பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் வாகனங்களை நிறுத்தி இடையூறு செய்வதை தவிர்க்க வேண்டும் என வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.