மத்திய அரசு தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் என்னும் பகுதியில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்திற்காக அனுமதி வழங்கி தற்போது அத்திட்டம் செயல்பட துவங்கியுள்ளது.
இதைத்தொடர்ந்து இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர், சமூக நல அமைப்பினர் தங்களது கண்டனங்களை தெரிவித்து வந்தனர்.
இதனிடையே, ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்தை எதிர்த்தும், இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் நிலவளம் முழுமையாக பாதிக்கப்பட்டு விவசாய பூமி தரிசுநிலமாக மாறிவிடும் என்றும் நெடுவாசல் பகுதி மக்கள் கடந்த சில நாட்களாக இரவு, பகல் என போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது, நெடுவாசல் பகுதி மக்களுக்கும், விவசாயிகளுக்கும் ஆதரவாக பல்வேறு பகுதியில் இருந்து இளைஞர்கள் நெடுவாசலில் குவிந்து போராட்டத்தில் ஈடுபட துவங்கியுள்ளனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் ஜல்லிக்கட்டு வேண்டி தமிழகம் முழுவதும் இளைஞர்கள் இணைந்து பல நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து தற்போதும் நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து அதே போன்ற போராட்டம் எழுந்துவிடுமோ என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
இதைத்தொடர்ந்து, தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இளைஞர்கள், மாணவர்கள் ஒன்றிணைந்த மைதானம் உள்ளிட்ட முக்கியப் பகுதிகள் காவல்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளன.
அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள வஉசி மைதானம் இன்று காவல்துறையினரால் மூடப்பட்டு காவல்துறையினரின் கட்டுபாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.

நெடுவாசலில் நடைபெறும் இளைஞர்கள் போராட்டத்தார் கோவையிலும் இளைஞர்கள், மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடலாம் என்ற தகவலை அடுத்து இது செயல்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக அவினாசி சாலியில் இருந்து வஉசி மைதானத்திற்குள் செல்லும் பாதைகள் பேரி-கேட் வைத்து அடைக்கப்பட்டுள்ளது.
கடையடைப்பு
வஉசி மைதானத்திற்கும், பூங்காவிற்கும் வரும் பொதுமக்களை நம்பி 25-க்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகள் அங்கு கடை அமைத்து வாழ்கை நடத்தி வருகின்றனர். கடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போதே அங்கிருந்த கடைகளை ஒரு வாரகாலத்திற்கும் மேலாக மூட காவல்துறையினர் உத்தரவிட்டனர். இதனால் அப்பகுதி வியாபாரிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில், தற்போதும் வஉசி மைதானத்தை மூடியுள்ளதால் பொதுமக்களின் வருகை தடுக்கப்பட்டுள்ளது. இதனால் வியாபாரிகளின் வாழ்வாதாரம் மீண்டும் கேள்விக்குறியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.