'ஓசை' தன்னார்வ அமைப்பின் 90-வது சூழல் சந்திப்பு இன்று மாலை சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி அரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஓசை அமைப்பின் நிறுவனர் காளிதாஸ் வரவேற்புரை வழங்கினார். ராக் ரவீந்திரன் தலைமை வகித்தார். தேசிய விருதுபெற்ற ஊடகவியலாளரும், தினமலர் (கோவை பதிப்பு) நாளிதழின் தலைமை செய்தியாளருமான சேவியர் செல்வகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

தொடர்ந்து, ‘சூழலியப் பாதுகாப்பில் ஓர் ஊடகவியலாளரின் பங்களிப்பு’ என்ற தலைப்பில் சேவியர் செல்வகுமார் பேசியதாவது :-
சூழலியல் தொடர்பான பாதுகாப்பில் ஓர் ஊடகவியாலாளரின் பங்கு மிக முக்கியமானதாகும். காடுகளும், விளைநிலங்களும் ஆக்கிரமிக்கப்படும் போது ஊடகங்கள் வாயிலாக மக்களும், அரசுக்கும் தெரிவிக்க வேண்டியதும், அதற்கான தீர்வு காண வேண்டியதும் பொறுப்புள்ள ஒரு செய்தியாளரின் கடமை.
அதன்படி, செய்தியாளராய் பணிக்கு சேர்ந்த நாள்முதல் சூழல் தொடர்பான பல்வேறு பிரச்சனைகளை தொடர்களாக எழுதி தினமலர் வாயிலாக வெளியிட்டுள்ளேன். அதில் பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைத்துள்ளது.

பரம்பிக்குளம்-ஆழியாறு நீர்பாசன திட்டம் காமராசர் காலத்தில் கொண்டுவரப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் தமிழகத்தில் புதியதாக 8 அணைகள் கட்டப்பட்டது. மேலும், கிடைக்கும் 50 டி.எம்.சி. தண்ணீரில் இருந்து 30 டி.எம்.சி தமிழகத்திற்கும், 20 டி.எம்.சி நீர் கேரளாவுக்கும் வழங்க முடுவு செய்யப்பட்டது.
காமராசர் ஆட்சி முடிந்த பின்னர் தமிழகத்தில் ஒரு அணை கூட கட்டப்படவில்லை. கேரளாவில் 65 ஆறுகள் உள்ளதாகவும் அதில் 2500 டி.எம்.சி நீர் கிடைப்பதாகவும் அம்மாநில அரசு கூறியுள்ளது. மொத்தம் 750 டி.எம்.சி நீரை மட்டும் அம்மாநில மக்கள் உபயோகிக்கின்றனர். மீதமுள்ள நீர் கடலில் தான் கலக்கிறது. ஆனால், தமிழகத்திற்கு 20 முதல் 30 டி.எம்.சி நீரை வழங்க சிக்கல் நீடிக்கிறது.
உரிமைகளை நிலை நாட்டுவதில் ஒரு ஊடகவியலாருக்கு பெரும் பங்கு உண்டு. ஆக்கிரமிப்புகள், மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பில் தனியாரின் பங்களிப்பு தொடர்பாக செய்திகள் கொடுக்கும் போது எனக்கு பல்வேறு மிரட்டல்கள் வந்தது. மிரட்டல்களுக்கு அஞ்சாமல் உண்மையை எழுதியதில் ஆக்கிரமிப்பில் இருந்த பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பறிமுதல் செய்ய்டப்பட்டுள்ளது, சுமார் 4 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்றுள்ளது.
நமது சூழலை பாதுகாக்க ஒரு சூழல்வாதி அதிகாரத்திற்கு வர வேண்டும். அப்போது, தான் நமது சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும். அது விரைவில் கைகூடும் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில், ஓசை அமைப்பின் உறுப்பினர்கள் உட்பட 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
