கோவை ராம்நகரில் உள்ள தனியார் பர்னிச்சர் கடையில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவை: கோவை ராம்நகர் பட்டேல் ரோட்டில் தனியாருக்கு சொந்தமான பர்னிச்சர் தயாரிப்பு குடோன் உள்ளது.
இந்த பர்னிச்சர் குடோனில் பணியாற்றும் ஊழியர்கள் நேற்று இரவு 7 மணி அளவில் பணிகளை முடித்துக்கொண்டு குடோனை பூட்டி விட்டுச் சென்றனர். இந்த நிலையில், நேற்று இரவு 9 மணி அளவில் அந்தக் குடோனில் இருந்து கரும்புகை வெளியேறியது. பின்னர் சிறிது நேரத்தில் தீ மளமளவென பிடித்து பற்றி எரிந்தது.
இதைப் பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கோவை தெற்கு மற்றும் வடக்கு தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், கோவை தெற்கு, வடக்கு தீயணைப்பு நிலைய அலுவலர்கள் சிவராஜ், தனசேகர பாண்டியன் ஆகியோர் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பின் குடோனில் பற்றியெரிந்த தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. மின்கசிவு காரணமாக தீ ஏற்பட்டிருக்கலாம் என தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தீ விபத்தில் பல லட்சம் பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. தீ விபத்து குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.