கோவை மாவட்டம், கரட்டுமேடு பகுதியை அடுத்த வழியாம்பாளையம் பகுதியில் எஸ்.என்.எஸ் என்ற பெயரில் தனியார் பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது.
இந்த கல்லூரியின் வளாகத்தையொட்டி விவசாயத்துக்கு தேவையான தண்ணீரை கொண்டு செல்லும் நீர்வழித் தடம் உள்ளது. மழைக் காலங்களில் ஊருக்குள் இருந்து மழை நீரானது இந்த ஓடை வழியாக விவசாய நிலத்துக்குள் பாய்ந்து வரும். இந்த நீரை நம்பி அந்த பகுதியில் வாழை, சோளம் உள்ளிட்ட பயிர்கள் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.

ஆனால், தற்போது இந்த ஓடையை தனியார் கல்லூரி நிர்வாகம் ஆக்கிரமித்துள்ளதுடன், மற்றொரு பகுதி வழியாக கழிவு நீரையும் வெளியேற்றி வருகிறது. மேலும், கல்லூரியின் வெளிப்பகுதியில் நீர் வழித் தடத்தை மூடும் பணியில் ஈடுபட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து எஸ்என்எஸ் கல்லூரி நிர்வாகத்தின் இத்தகைய செயல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், நீர் வழித்தடத்தை மாவட்ட நிர்வாகம் மீட்டுத்தரக் கோரி, அப்பகுதி பொதுமக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இந்த ஓடை தடுக்கப்பட்டால் மழைக் காலத்தில் நீர் வெளியேறாமல் குடியுருப்பு பகுதிக்குள் தண்ணீர்புகும் நிலை ஏற்படும் எனவும், இதனால் இதனை தடுத்து நிறுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அம்மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர்.