தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 12 மணி நேர வேலை தொடர்பான மசோதாவைக் கண்டித்து கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சட்ட நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இவர்களை போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை: தமிழ்நாட்டில் 12 மணி நேர வேலை சட்ட மசோதாவிற்கு மாநிலம் முழுவதும் பல்வேறு அமைப்பினர், கட்சியினர், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மாவட்ட செயலாளர் அர்ஜுன் தலைமையில் இச்சட்டத்தை கண்டித்து போராட்டம் நடத்தப்பட்டது.
அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென அந்த சட்ட மசோதா நகல்களை எரித்தும், தமிழக அரசுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பியும் தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர். பின்னர் அங்கிருந்த காவலர்கள் நகல் எரிப்பை தடுக்க முற்பட்டதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அவர்கள் அமர்ந்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட சுமார் 50-க்கும் மேற்பட்டோரை காவலர்கள் கைது செய்து வாகனத்தில் ஏற்றினர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.