திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகிலுள்ள அழகுமலையில் நாளை ஜல்லிக்கட்டுப்போட்டிகள் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில், கட்சி பிரமுகர்களுக்கு மட்டும் டோக்கன் வழங்கிவிட்டு, உள்ளூர் மாடுகளுக்கு டோக்கன் வழங்காமல் இழுத்தடிக்கப்படுவதாக இளைஞர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அலகுமலை கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம்.
அந்த வகையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு அப்பகுதி கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், போட்டி நடத்துவது தள்ளி வைக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், அலகுமலை கிராமத்தின் ஒரு தரப்பு, கிராம மக்களின் எதிர்ப்பையும் மீறி அழகுமலை ஊராட்சி தலைவர் தூயமணி என்பவர் ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது என மூன்று முறை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நிலையில் நீதிபதிகள் வழக்கை மூன்று முறையும் தள்ளுபடி செய்தனர். உயர் நீதிமன்றம் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கிய நிலையில், நாளை (செவ்வாய்க்கிழமை) ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுகிறது.
இதில் சேலம், திருச்சி, கரூர், நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான மாடுபிடி வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர். அதேபோல், பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாடுகளும் கலந்து கொள்ள உள்ளன.
இதுவரை மாடுபிடி வீரர்கள் 560 பேருக்கு டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. 650 காளைகளுக்கு டோக்கன் வழங்கப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு போட்டிக்கான வாடிவாசல் அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை போட்டி ஏற்பாட்டாளர்கள் தீவிரமாக செய்து வருகின்றனர்.
மேலும் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், எந்த அசம்பாவிதங்களும் நடைபெறாமல் இருக்க திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான போலீசார் நாளை பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர் எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பார்வையாளர்களுக்கான மேடைகள் அவசர உதவிக்கான அறைகள், காவல்துறை கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கும் பணிகளும் தற்போது நடைபெற்று வருகிறது.
நாளை நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டியை செய்தி துறை அமைச்சர் சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் தொடங்கி வைக்க உள்ளனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு சிறப்பு விருந்தினர்களாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த நிலையில், மாடுபிடி வீரர்களுக்கு மட்டும் டோக்கன் வழங்கிவிட்டு காளைகளுக்கு வழங்க வேண்டிய டோக்கன்களை கட்சி பிரமுகர்களுக்கு ஜல்லிக்கட்டு பேரவையினர் வழங்கி விட்டதாக உள்ளூர் இளைஞர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
அதுமட்டுமின்றி, மதுரை பகுதியில் உள்ள காளைகளுக்கு டோக்கன் வழங்கி உள்ளார்கள் எனவும், உள்ளூர் காளைகளுக்கு டோக்கன் வழங்கவில்லை எனவும் இது குறித்து ஜல்லிக்கட்டு பேரவையில் உள்ளவர்களிடம் கேட்டால் இன்று நாளை என இழுத்தடிப்பதாகவும் மாடு வளர்ப்போர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
மேலும், உள்ளூர் மாடுகளுக்கு டோக்கன் வழங்காவிட்டால் காளைகளுடன் நாளை கருப்புக் கொடி காட்டுவோம் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.