வால்பாறை அருகே தேயிலை தோட்டத்தில் மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஐயப்பன் என்ற தொழிலாளியை கரடி தாக்கியதில் காலில் காயம் ஏற்பட்டு, பொள்ளாச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே தேயிலை தோட்ட தொழிலாளியை கரடி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2 தினங்களுக்கு முன்பு சிறுகுன்றா எஸ்டேட் பகுதியில் சிறுத்தை தொடர்ந்து ஒரு பெண் ஊழியர் உட்பட 2 வட மாநில தொழிலாளிகளை கடித்து காயப்படுத்தியது.
இந்நிலையில் இன்று வால்பாறை அருகே இஞ்சிபாறை எஸ்டேட் பகுதியில் குடியிருந்து வரும் ஐயப்பன் (55) என்பவர் 4ஆம் நம்பர் தேயிலை தோட்டத்தில் மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக தேயிலை தோட்டத்தில் சுற்றித்திரிந்த கரடி ஒன்று ஐயப்பனை திடீரென தாக்கியுள்ளது.
ஐயப்பனை காலில் கடித்து காயப்படுத்திய கரடி, தொடர்ந்து அவரது கழுத்தில் கடிக்க முயன்றபோது கையில் வைத்திருந்த மருந்தை கரடியின் மேல் தெளித்ததால் கரடி அவரை விட்டு வனப் பகுதியில் ஓடியது. இந்நிலையில் அருகில் இருந்தவர்கள் அவரை வால்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்பு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதாலும், தொழிலாளர்களை சிறுத்தை, கரடி போன்றவை தாக்குவதாலும் இப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
இந்நிலையில், வனவிலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறாதவாறு தடுக்க உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வனத்துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.