தூத்துக்குடி மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசு ஊழியர் பாதுகாப்பினை உறுதிசெய்யும் சட்டம சோதாவை பேரவையில் நிறைவேற்ற வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
திருப்பூர்: தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் என்பவரை பணியில் இருந்தபோது, திட்டமிட்ட கொலைவெறி தாக்குதலால் உயிரிழந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் திருப்பூர் மாவட்ட தாராபுரம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் வருவாய் கிராம ஊழியர் சங்க வட்டத் தலைவர் குப்புராஜ்,தலைமையில் வட்ட செயலாளர் கனகராஜ் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது, மணல் கடத்தல் குறித்து ஏற்கனவே மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறையினருக்கும் புகார் அளித்த நிலையில், மணல் கடத்தல் கும்பலை சேர்ந்த இருவர் அரிவாளைக் கொண்டு தலை உடல், கைகளில் சரமாரியாக வெட்டி விட்டு சென்றுள்ளனர்.
படுகாயம் அடைந்த கிராம நிர்வாக அலுவலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி துடிதுடித்து இறந்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் உயிர் நீத்த கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் குடும்பத்தாருக்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என அறிவித்துள்ளார்.
கிராம நிர்வாக அலுவலர் மீதான இந்தத் தாக்குதலை, கிராம நிர்வாக அலுவலர்கள், மற்றும் அவர்களுக்கு உதவியாக இருக்கும் வருவாய் கிராம ஊழியர்களும் மீது மட்டும் நடத்தப்பட்ட தாக்குதலாக கருதாமல், ஒட்டுமொத்த அரசு ஊழியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலாகவும், சாமானிய மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலாகவும்,
பொது அமைதிக்கு விடுக்கப்பட்ட சவாலாகவும் கருதி தாராபுரத்தை சேர்ந்த அனைத்து சங்க உறுப்பினர்களும், பொதுத்துறை சங்கங்களும், துறை வாரி சங்கங்களும், பொதுமக்களும் முழு ஆதரவு அளித்து, அரசு ஊழியர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் உரிய சட்ட திருத்தம் செய்து ஆணையாக வெளியிட வேண்டுமென ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இறந்தவரின் குடும்பத்தாருக்கு நீதி கிடைத்திட ஆவண செய்ய வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் முழக்கங்களை எழுப்பினர். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.